20 May 2022

தீப்பாய்ந்துபட்டான்கல், மூலஸ்தானேஸ்வரர் கோயில், தகடூர், நஞ்சன்கூடு, கர்நாடகம்.

கட்டுரை ஆசிரியர்
ஜான் பீட்டர், தாளவாடி

தொல் பழங்காலந்தொட்டே தமிழகத்தின் தவிர்க்க முடியாத கலாச்சார கூறுகளில் ஒன்றாக தனிமனித வழிபாடு என்பது நடப்புலகிலும் தொடர்ந்து நிலை கொண்டுள்ளதை காண்கிறோம். முடியாட்சி காலத்தில் பரவலாக்கப்பட்ட அரச வழிபாடானது மக்களாட்சி மலர்ந்த பிறகும் தாம் சார்ந்த கட்சியின் அரசியல் ஆளுமைக்காகவும் திரைவானின் அபிமான நட்சத்திரங்களுக்காகவும் வாழ முற்பட்டு தமது ஆதர்சநாயகனின் உடல்மொழி, பேசும் பாவனைகளை தம்முள் வலிந்தேற்றி தமக்கான சுயத்தையிழந்து இன்றைய தலைமுறையினர் தனி மனித வழிபாடு என்ற புதைமணிலில் சிக்குண்டு உழல்வதை நாம் கண் கூடாக காண நேரிடுகிறது!

இதன் உச்சமாய் தம் தலைவனின் அரசியல் வாழ்வில் இழுக்கு உண்டாகிலும், அல்லது இயற்கை பிணியினால் பீடிக்கபடுகையிலும் ஆதர்ச கதாநாயகனுக்கு இறப்பு நேரிடினும் அந்த இழப்பை தாளவொட்டாமல் தம்மை தாமே நெருப்பிட்டு வெந்து தணலாகும் விசிறிகளையும் தமிழகம் ஏராளமாய் கண்டுள்ளது. மித மிஞ்சிய தனிமனித வழிபாடு மக்களை இத்தகைய மனநோய்க்கு இட்டுச் செல்கிறது என்பதில் ஐயமில்லை!

நீண்ட நெடிய அக்கால தமிழ் சமூகத்தில் பீடித்திருந்த இந்த மனோபாவத்தை கண்டுதான் கணியனார் "மாட்சியின் பெரியோரை வியத்தல் இலமே! சிறியோரை இகழ்தல் ஆதனினும் இலமே! என பாடினரோ? என எண்ணத் தோன்றுகிறது! இருப்பினும் அக்காலத்தில் தமது அரசன் போர்களத்தில் வெற்றி வாகை சூடவும், மற்றும் நோயின்றி வாழவும் தமது உயிரினை கடவுளர்க்கு காணிக்கையாக படைப்பதை பெரும் வீரச்செயலாக கருதினர்.ஆத்மபலி(உயிர்கொடை) தெய்வத்திற்காகவும்,மத நம்பிக்கை பொருட்டும் நிகழ்வதுண்டு.

அக்காலத்தில் அரசனுக்கும், நாட்டுக்காகவும், ஊர் நலனுக்காக தம் இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு அவரது உறவினர்கள் நடுகல் எடுப்பித்து வழிபட்டனர். இறந்த வீரனுக்கு நிலம் தானமாக வழங்கப்பட்டது. அதனை உதிரப்பட்டி நிலம் என அழைத்தனர். கர்நாடக கல்வெட்டுகள் "நெத்தரு கொடுகெ" என இதனை குறிக்கிறது. இத்தகு நடுகல் வீரர்கள் பற்றிய குறிப்புகளை தமிழ் செவ்வியல் இலக்கியங்களான தொல்காப்பியம், சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, புறநானூறு குறிப்பிடப்படுவது போன்றே அக்கால கன்னட சாஹித்யங்கள் பலவும் சான்றுகள் பகர்கின்றன. ஆதிகவி பம்பா இயற்றிய விக்ரமார்ஜூனியம், ஜன்னாவின் அனந்த நாதபுராணம், பந்துவர்மாவின் ஹரிவம்சபூதயா ஆகிய நூல்களில் ஆத்மபலி, நடுகல் வழிபாடு பற்றி கூறுகிறது.

இரவு இருக்கும் வரை மின்னி மறையும் விண்மீன்களை போல தங்கள் இறையான அரசன் இவ்வுலகில் இருக்கும் வரை உயிர் வாழ்ந்த மெய்காப்பாளர் படையினர் ஆபத்துதவிகள், தென்னவன், வேலைக்காரபடை, கைகோளர்படை, என அக்கால தமிழகத்தில் இருந்தது போன்றே கர்நாடகத்திலும் இத்தகைய உயிர் கொடை வீரர்கள் இருந்தனர் அவர்கள் எரே வேசா, ( எரே-தலைவன் வேசா-ஆணை ) வேலவாளி ( வேல-காலம் வாளி-கடமை, பொறுப்பு ) கருடா, மனெ மகன், பிரிய புத்ரா, பிரேமாலய சூதன் என பல பெயர்களில் கன்னட மொழிகல்வெட்டுகள் குறிக்கிறது. இம்மையில் தங்கள் அரசனுக்கு சேவை செய்வது போன்றே மறுமையிலும் விண்ணுலகில் பணி செய்ய வேண்டி உடன் உயிர் துறக்கும் இவர்களை கன்னட பழம் இலக்கியங்களில் "துலிலாள்" "வேலவதிகா" எனவும் விளிக்கிறது.

ஆத்மபலி வீரர்களை பற்றிய அயல்நாட்டு  பயணிகளின் குறிப்புகள்-:
ஸ்ட்ராபோ குறிப்புகளில் 22B.C ஆண்டில் மன்னர் அகஸ்டஸ் அவைக்கு தென்னிந்திய தூதுக்குழுவினர் எண்மர் வருகை தந்தனர் எனவும் பரிசு பொருட்களை அரசருக்கு அளித்து அவர் நட்பினை வேண்டினரென டெமஸ்கஸ் குறிப்பிடுகிறார் அந்த தூதுக் குழுவிலிருந்த ஒருவன் ஏதென்ஸ் நகரில் தீக்குளித்து உயிர் விட்டான் எனவும் அவர்கள் மத நெறி முறைப்படி உலகவியல் துன்ப நிகழ்வுகளிலிருந்து விடுதலை பெற விழைந்து உடலெல்லாம் நறுமண தைலம் பூசிக் கொண்டு புன்முறுவலுடன் நெருப்பில் பாய்ந்து உயிர் துறந்தான் இங்கு படுத்திருக்கிறான்" எனவும் அவன் சமாதியில் எழுதப்பட்டது, என்ற குறிப்பை தருகிறது.

அபூஜைது (கி.பி.916) தென்னிந்திய வருகையின் போது அவரது குறிப்பில்-:
அரசனது முடிசூட்டு விழாவில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் சிறப்பாக சமைத்த சோற்றை வாழை இலையில் படைத்து அரசனுடன் ஒன்றாக அமர்ந்து உண்ணும் அமைச்சர்கள், மெய்க்காப்பாளர்கள், நண்பர்கள் அனைவரும் அன்றிலிருந்து தோழமை, விசுவாசம் என்ற கயிறினால் பிணைக்கபட்டதாக கருதி போரின் போது அல்லது இயற்கையாகவோ அரசன் இறந்து போனால் அந்த இறுதி சடங்கில் அரசனுடன் விருந்து உண்ட அனைவரும் தாங்களாகவே முன் வந்து நெருப்பில் குதித்து உயிர் விட்டனர்.

13ம் நூ. தென் தமிழகத்திற்கு வருகை புரிந்த மார்கோ போலோ (பொ.யு.1293). அரசன் இறந்தவுடன் அவன் சிதையில் விழுந்து உயிர் துறந்த பிரபுக்கள், பணியாளர்கள் பற்றி குறித்துள்ளார். அதற்கடுத்து 14நூ. சோழநாட்டிற்கு வருகை தந்த ஒடெரிக் துறவி (1321-22) கோயில் திருவிழாவின் போது பக்தி பரவசத்துடன் ஓடும் தேர்கால்களில் விழுந்து உயிர் துறந்த பக்தர்களையும் ஆத்மபலி சடங்கை பற்றி குறித்துள்ளார்.

உயிர்கொடை வீரன் தாமாகவே முன்வந்து உயிர் பலி கொடுக்க போவதை மக்களிடம் முன்னதாகவே அறிவித்து இறுதி விருந்தை உண்கிறான். பின்னர் கழுத்தில் தொங்குகின்ற 5 கட்சிகளில் ஒன்றை கொண்டு தனது தசையை அறுத்து கடவுளர் சிலையின் முகத்தில் வீசுகிறான் இறுதியில் "எனது உயிர் இறைவனுக்கு படைக்கபடுகிறது" என உரத்து கூறியவாறு தனது சிரத்தை தானே கொய்து மாண்டு போகிறான் என கூறுகிறார். ஏறக்குறைய இதே 14நூற்றாண்டில் தமிழகத்திற்கு வருகை தந்த ஜார்டனஸ் துறவி (பொ.யு.1323-1330) தலை பலி சடங்கை பற்றி குறித்துள்ளார்.

இந்த உயிர் கொடையாளர்களின் அறம், வீரம், அர்பணிப்பு அரசபற்று ஆகிய பண்புகளை வெளிப்படுத்தும் முகமாக பல்வேறு முறையில் உயிர் பலி மரபினை பின்பற்றினர். தமிழகத்தில் தனது சிரத்தை தானே அரிந்து கொள்ளும் அரிகண்டம் இன்னொரு நபர் மூலம் தலையை வெட்டி யெடுக்கும் சாவாரபலி, தமது உடம்பை 9 பாகங்களாக வெட்டிக் கொள்ளும் நவகண்டம், மூங்கில் மரத்துடன் தலையை சேர்த்து கட்டி வெட்டுண்ட தலை மூங்கில் மரத்தில் தொங்கும் "தூங்கு தலை" முறை ( கர்நாடகத்தில் சிடிதல ) போன்ற இம்முறைகளில் மட்டுமின்றி கர்நாடகத்தில் மேலும் பல முறைகளில் ஆத்மபலி சடங்கு நடைபெற்றதை அறிந்து வியப்பிலாழ்கிறோம். 

உயரமான மலை முகட்டிலிருந்து விழுந்து உயிர்துறப்பது" 
மன்னர் இறந்த பின்னர் அவர் உடலை தமது மடியில் கிடத்தி உயிருடன் மண்ணுக்குள் புதைக்கபடும் முறைக்கு "கீழ்குந்தெ" எனப்படும் (கங்க அரசன் நிதிமார்கா தொட்டஹுண்டி நடுகல் கல்வெட்டு) உயிருடன் தோலை உரித்து கொள்வது, பாய்தோடும் புனித நதி பிரவாகத்தில் மூழ்கி உயிர் துறத்தல் ( சாளுக்கிய அரசன் ஆகவமல்லன் ) தீயில் பாய்ந்து உயிர் துறப்பது என இவ்வகையான முறையில் தீப்பாய்ந்து பட்டான் என்ற அபூர்வ வகை நடுகல் ஒன்றினை காணும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன் அவற்றை இங்கு காண்போம்.

நடுகல் அமைப்பு-:
4 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட சதுர வடிவிலான பலகை கல்லில் மூன்றடுக்கு நிலை நடுகல் கீழிருந்து மேலாக-:

முதல் நிலையில் உயிர்பலி வீரன் மார்புக்கு நேராக இரு கரங்களை மடக்கி சேவித்த வாறு நின்ற நிலை. அடுத்து எரிகின்ற அக்னி குண்டத்தில் பாய்வது போன்று காட்சி படுத்தப்பட்டுள்ளான்.

இரண்டாம் நிலையில் தீயில் பாய்ந்து உயிர் துறந்த வீரனின் ஆன்மா இரு தேவகன்னியர்களின் கரம் பற்றி விண்ணுலகம் செல்லும் காட்சி.

மூன்றாம் நிலை இருமருங்கும் தேவகன்னியர் கரங்களில் வெண் சாமரமேந்தி ஆடல் கோலத்தில் காட்சியளிக்க நடுவே ஆத்மபலி வீரன் இருக்கையில் சுகாசனத்தில் அமர்ந்து அபயஹஸ்தம் காட்டியவாறு வடிக்கப்பட்டுள்ளான். இடையே கல்வெட்டு சிதைந்த நிலையில் உள்ளது. இத்தகு தீப்பாய்ந்து பட்டான் நடுகற்கள் 10 நூற்றாண்டுக்கு பிறகான காலக்கட்டத்தில் காணகிடைப்பதில்லையென கன்னட நடுகல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


தற்காலத்தில் ஒரு நிகழ்வு அல்லது சூழலை வெறுத்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் செயற்பாடாக போராட்ட வடிவம் பெற்று தீக்குளிப்பு என்பது அறவழி போராட்ட மாக கருதி இனம், மொழி காக்க நடந்தாலும் அக்காலத்தில் பெருமளவு கர்நாடகத்தில் நடைபெற்ற நிலை மாறி இந்த தீக்குளிப்பு நிகழ்வுகள் அங்கு தற்போது அருகிய நிலையிருப்பதும் தமிழகத்தில் மாத்திரமே இன்னும் தொடர்கதையாக நீண்டிருப்பதும் வருந்த தக்கது!

கட்டுரை ஆசிரியர். ஜான் பீட்டர்

29 January 2022

மல்லேஸ்வரர்திருக்கோயில், வேழக்காடுகளில்சோழச்சுவடுகள் நந்திகுந்தா, நஞ்சன்கூடு, கர்நாடகம்

கட்டுரை ஆசிரியர்
திரு ஜான் பீட்டர்
தாளவாடி
 
கர்நாடகத்தில் சோழர் தடயங்களை தேடும் படலத்தில் இம்முறை நாம் பயணித்தது இராஜேந்திர சோழனின் முயங்கி படையெடுப்பு குறித்த முக்கிய சான்றினை கூறும் கல்வெட்டைத் தேடி.. மைசூரிலிருந்து கிழக்காக 23 கி.மீ.தொலைவில் நஞ்சன்கூடு தாலுகாவில் அமைந்துள்ளது நந்திகுந்தா பஞ்சாயத்து கிராமம். இங்கு சென்று ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மல்லேஸ்வரர் கோயிலை கண்டறிவதில் யாதொரு சிரமும் இருக்கவில்லை! ஆனால் தற்போது இக்கோயில் மல்லிகார்ஜூனசுவாமி கோயில் என்று பெயர் மாற்றம் பெற்றிருந்தது!


கோயில் அமைப்பு-:
சோழர் கால பழைய கோயிலை முற்றிலும் இடித்து புதிதாக கோயில் தமிழகத்தில் காணக்கிடைக்கும் தற்கால கோயில் பாணியை போன்று கட்டப்பட்டிருந்தது. முகப்பு தோரணத்துடன் கூடிய வாயில் மண்டபம், அதனையடுத்து சற்று விசாலமான வெளிமணடபம்,நடுவே கருவறை உள்ளே ஆயிரம் ஆண்டுகள் பழமையான மூலவராக லிங்கம் கருவறையின் மேற்புறம் உச்சியில் பித்தளை கலசங்கள் கொண்ட விமானம் அமைத்து நவீனதுடன் காட்சி தந்தது! வெளிப்புறத்தில் கோயிலின் பழைய புகைப்படம் (இடிக்கப்படுவதற்கு முன்புலேமினேட் செய்து மாட்டப்பட்டிருந்தது, அவை இப்பகுதியில் நாம் சென்று பார்த்த ஏனைய சோழர் கால கோயில்கள் போன்றே கோயில் ஆகம கட்டிட உறுப்புகள் ஏதுமின்றி மண்டபம் போன்று காட்சி தருகிறது




கல்வெட்டு மற்றும் வரலாறு...
முன்புற வளாகத்தில் 3 அடி உயரமும் 4அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் இரு புறமும் கல்வெட்டு பொறிக்கப்பட்ட நிலையில் நடப்பட்டுள்ளது!

கல்வெட்டுமுன்புறம்
1. திரு மன்னி வளர.....
17.செம்புத் திருதகு முடியும் பயங்கொடு
18.பழமிக முசங்கியில் முதுகி(டொளி)
19.ஜெயசிங்கனாள.........வா(டி)..

கல்வெட்டு பின்புறம் -:
20. தேரி சகவருஷம் 943
21.ரௌத்ர சம்வத்சரத பால்குன மாசதா சுக்ல
22.பக்ஷம் புதவாரம் புன்னனமே உத்தரநட்சத்திரம் சோ
23. கிரஹணதந்து எட தொரே நாடுள் பதி நீ
24.க்கி மைஅனாட நந்திகுந்தாத எணகொகும்ப
25.ய்யண மாகம் மல்லிகாவுண்டனும் எரெமனு
26.கும்பயனு மாடிசித மல்லேஸ்வரகேம
27.ல்லி காவுண்டம் பிட்ட தேவது தேவுதபடா
28.கணதெசயொந்துபாலிமத்த மதர கொலகே
29.மூடபலகளல்லி கிரியபாளயம் மல்லிகா
30.உண்ட பிட்ட தேவதித்தி தேவலககங்கே பிட்டிது மத்த
31.மெரடுநந்த திவிகேயும் நிலலெக்கம் மெரந்து போ
32.ல்து நிவேத்யமும் கரகாண தென்னயுமி
33.நிசுவபிட்டம் மாவனு மஅளியனும்மாடி
34. .......லேஸ்வரகே......காவுண்டபிட்டநிந்தி...
35......நிதி..

கல்வெட்டு செய்தி-:
கல்வெட்டில் அரசன் பெயர் குறிப்பிடவில்லை! இருப்பினும் "திருமன்னி வளர"என்ற மெய்கீர்த்தியுடன் தொடங்குவதால் இராஜேந்திர சோழனின் காலத்தியது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லைதமிழ் மெய்கீரத்தி ஹளகன்னடமொழி வரி வடிவில் எழுதப்பட்டுள்ளதால் பிழைகள் மலிந்து காணப்படுகிறது!. சக.943. பங்குனி மாதம் புதன்கிழமை, உத்திர நட்சத்திரம், சந்திர கிரகணம் அன்று இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது ஆங்கில வருடத்தில் மார்ச் மாதம் 1 தேதி பொ.யு.1021. மைசூ நாடு நந்திகுந்தா ஊரைச்சேர்ந்த எணெகாரகும்பய்யா என்பவனின் மகன் மல்ல காவுண்டா மற்றும் ஏரமா, கும்பய்யா ஆகியோர் இக்கோயிலையெடுப்பித்து கோயிலை பராமரிக்கவும் நுந்தா விளக்கெரிக்க செக்கு கல்லையும் தானமாக வழங்கிய செய்தியை கூறுகிறது. அக்காலந்தொட்டு இவ்வூர் நந்திகுந்தா என்ற பெயரிலே வழங்கிவருவது சிறப்பு!


இடைதுறைநாடு, முயங்கி போர்-:
கல்வெட்டின் முன்புறத்தில் "திருமன்னி வளர என தொடங்கும் இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தி முயங்கியில் ஜெயசிம்மனை புறமுகிட்டு ஓடச்செய்ததை குறிப்பிட்டவுடன் நின்று அதன் பிறகு அடுத்து பின்புறத்தில் இடைதுறைநாடுள்- பதிநீக்கி எனத்தொடங்குவது ஒரு முக்கிய வரலாற்று குறிப்பை கொடுப்பதாக கர்நாடக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர் அதற்கு முன்னர் இராஜேந்திர சோழனின் முயங்கி போர் இடைதுறைநாடு வெற்றி ஆகியவற்றை குறித்து பார்ப்போம்!

கிருஷ்ணா நதி, துங்கபத்திரா பேராறுகளுக்கிடையிலான பகுதி இடைதுறைநாடு எனப்படும் இது மேலை சாளுக்கிய தேசத்தின் ஆட்சிக்குட்ப்பட்ட பகுதியாக திகழ்ந்தது இராஜேந்திரன் சோழ மண்டலத்து இளவலாகவும் பின்பு பேரரசராக பொறுப்பேற்றவுடன் பெற்ற முதல் வெற்றி இடைதுறைநாடு நாட்டு வெற்றியாகும். பின்னர் இராஜேந்திர சோழன் தெற்கு பகுதியில் பாண்டியர்கள் மற்றும் ஈழத்தின் மீதும் தனது கவனத்தை செலுத்தியும் இருந்த நல் வாய்ப்பினை பயன் படுத்தி கொண்ட மேலை சாளுக்கியன் இரண்டாம் ஜெயசிம்மன் கீழை சாளுக்கியர் விவகாரத்தில் தலையிட்டு தனது ஆதரவாளலான விஜயாதித்தனை வேங்கி அரியணையில் அமர்த்தினான் இதனால் வெகுண்டெழுந்த இராஜேந்திர சோழன் தனது தங்கை குந்தவை மகனான இராஜராஜநரேந்திரனை அரியணையில் அமர்த்த நினைத்து மேலை சாளுக்கியத்தின் மேல் பெரும்படையெடுப்பை நிகழ்த்தினான் முயங்கியில் போர் மூண்டது முயங்கி என்பது தற்போதைய கர்நாடக மாநிலத்தில் ரெய்ச்சூர் மாவட்டத்தில் மத்தியில் அமைந்துள்ள மாஸ்கி என்ற ஊராகும் இப்போரானது இராஜேந்திரனின் 9 வது ஆட்சியாண்டு அதாவது பொ.யு.1020 ஆண்டு கடைசியில் அல்லது பொ.யு1021 தொடக்கத்தில் அதாவது ஜனவரி மாதம் நடைபெற்றிருக்க வேண்டுமெனவும் இவ்வெற்றியை அவை புலவர்கள் மெய்கீர்த்தியில் இணைத்து ஆவணத்தில் பொறிப்பதற்க்கும் இரண்டு மூன்று மாத கால அவகாசம் தேவைப்பட்டிருக்கலாம் எனவும் கருத்து தெரிவிக்கின்றனர்.

அடுத்து இடைதுறைநாடுள் -பதிநீக்கி என்ற பதத்தில் இடைதுறைநாட்டில் எழுந்த குழப்பத்தை நீக்கி நிலையான ஆட்சி நிர்வாகத்தை முன்னெடுத்துச் அமைதி நிலவச் செய்ததையும் குறிப்பிடுவதையும் கருத்திற் கொள்ள வேண்டும். மேலும் இக்கல்வட்டு அமைந்துள்ள மைசூர் நாட்டிலும் காவிரி ஆற்றின் தென்கரை பகுதி இடைதுறைநாடு என அழைக்கப்பட்டிருந்தாலும் இப்பகுதியானது இராஜராஜ சோழனின் காலத்திலே பொ.யு.1004 ஆண்டு வாக்கிலே சோழர் கைவசத்தில் இருந்தது எனவும் கிட்டதட்ட நூற்றாண்டுகளுக்கு மேலாக குழப்பமின்றி ஆட்சி நிர்வாகம் நடைபெற்றதால் இது மேலை சாளுக்கிய தேசத்தின் இடைதுறைநாட்டைதான் குறிப்பிடுகிறது என்பது கர்நாடக வரலாற்றாசிரியர்களின் ஒருமித்த கருத்தாகும்.