29 December 2021

A Rare Hero Stone / இருவேறு நூற்றாண்டின் அரிதான நடுகற்ககள் / at Horalavadi, Nanjangudu, Mysore District, Karnataka.

கட்டுரை ஆசிரியர்
திரு ஜான் பீட்டர்

மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவிலிருந்து 5கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஹொரளவாடி பஞ்சாயத்து கிராமம்.இவ்வூர் கல்வெட்டுகளில் அலபூர் என்றும் ஹொரளவாடி சீமை எனவும் குறிப்பிடப்படுகிறது. இங்கு கங்கமன்னன் ஸ்ரீபுருஷாவின் கல்வெட்டு மற்றும் கங்கர் காலத்தை சேர்ந்த நடுகற்கள் கிடைப்பதால் அக்காலத்தில் தொன்மை சிறப்பு வாய்ந்த ஊராக திகழ்ந்திருக்கும். மேலும் இங்கு ஹளகன்னடமொழியில் அமைந்த 8ம் நூற்றாண்டு தானக் கல்வெட்டில் 10ம்நூற்றாண்டை சேர்ந்த மூன்றடுக்கு தலைபலிகல்லும் ஒரே கல்லில் வடிக்கப்பட்டிருப்பதாக ஆவணத்தில் (எபி.கர். மடலம்- 3) மூலம் அறிந்து அவற்றை காண விழைந்தேன்!.


மைசூரிலிருந்து 50கி.மீ பயணப்பட்டு நஞ்சன்கூடிலிருந்து பிரசித்திபெற்ற சுத்தூர் மடத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ள ஹொரளவாடியை வந்தடைந்தேன் ஆவணத்தில் பொம்மப்பா கோயிலின் வடபுற திசையில் இந்நடுகல் உள்ளதாக அறிந்து அக்கோயிலை பற்றி விசாரிக்கையில் தற்போது அக்கோயில் இடிந்த நிலையில் வழிபாட்டில் இல்லை என்பதையறிந்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் ஊர் பெரியவர் ஒருவர் உதவ முன் வந்தார் அவரை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஊருக்கு வெளியே ஒற்றையடி பாதையில் பயணித்து அக்கோயில் இருக்குமிடத்தை அடைந்தோம் நான்கு பலகை கற்களால் ஆன சிறு வீடு போன்ற பொம்மப்பா கோயில் தற்போது விழுந்து கிடந்தது அதன் அருகே அந்த நடுகல்லை தேடத் தொடங்கினோம் அருகேயுள்ள பள்ளத்தில் மேற்புறம் சிதைந்த நிலையில் பார்க்க முடிந்தது ஏறக்குறைய முக்கோண வடிவத்தில் காட்சி தந்த அந்த மூன்றடுக்கு நடுகல்லின் முதல் நிலையில் (கீழிருந்து மேலாக) தலைபலிவீரன் ஆசனம் போன்ற பீடத்தில் பத்மாசனத்திலோ அமர்ந்து கரங்களை கூப்பியவாறு அமர்ந்திருந்தான் அருகே சிரசை கொய்வதற்காக அரிவாளை ஓங்கியவாறு ஒருவனும் காட்சி தருகின்றனர் இரண்டாம் நிலையில் உயிர் நீத்த தலைபலிவீரன் இரு தேவகன்னியர்களின் தோள்களை யணைத்தவாறு விண்ணுலகிற்கு பறந்து செல்லும் காட்சி மூன்றாம் நிலையில் இருமருங்கும் தேவகன்னியர் நின்ற நிலையில் நடுவே தலைபலிவீரன் (அ) இந்திரன் சுகாசனத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருகின்றனர். நடுகல்லின் பின்புறத்தில் ஹளகன்னடமொழியில் அமைந்த எழுத்துக்கள் படிக்கவியலா வண்ணம் சிதைந்த நிலையில் காண முடிகிறது.

கல்வெட்டு செய்திகள் -; 
8ம்நூற்றாண்டு எழுத்தமைவில் பொறிக்கப்பட்டிருந்த ஹளகன்னடமொழி கல்வெட்டு கூறும் செய்தியாவது-: கெசில்மனே என்ற ஊரின் தலைவர்கள் ஒன்று கூடி ஏரிக்கரைக்கருகே உள்ள நஞ்சை நிலத்தை கொடையாக அமித்தபட்டதி மகன் சோமதி என்பவனுக்கு தானமாக வழங்கியதை கூறுவதால் இது நடுகல் கல்வெட்டாகயிருக்கலாம்.

அதே கல்வெட்டின் கீழே 10 நூற்றாண்டு எழுத்தமைதியில் அமைந்த கல்வெட்டு கூறும் செய்தி-: தலைபலிவீரனான எரேவின் மகன் பெனயிதா கார்கேவிற்கு பத்து கந்துகா நிலத்தை பல்லிகாலே சந்தையா என்பவன் தானமாக வழங்கியதை கூறும் இக்கல்வட்டு எக்காரணம் பொருட்டு தலை பலி கொடுத்தான் என்பதை குறிப்பிடவில்லை!

இந்த நடுகல் குறித்து தம்பி Kumaravel Ramasamy யிடம் பேசுகையில் இதே போன்று இரு வெவ்வேறு காலக்கட்டத்தை சேர்ந்த வரலாற்று செய்தியை தாங்கிய நடுகல் நம் தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ளது எனக் கூறி அந்நடுகல் பற்றிய குறிப்புகள் மற்றும் புகைப்படத்தையும் அனுப்பி வைத்தார். தர்மபுரி மாவட்டம் இண்டூர் என்னும் ஊரில் 8-9 நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்து நடுகல் கல்வெட்டில் கங்க அரசன் ஸ்ரீபுருஷாவின் கீழ் இப்பகுதியை ஆட்சி செய்த மாவலி வாணராயர் பூசலின் போது நான்கு வீரர்களுடன் போரிட்டு வீர மரணமெய்தியதன் நினைவாக நடுகல் எழுப்பபட்டதென கூறுகிறது. இதே நடுகல்லின் வீரனின் சிற்பத்தை செதுக்கி யெடுக்கப்பட்டு 11நூற்றாண்டை சேர்ந்த இராஜாதிராஜனின் 31 வது ஆட்சியாண்டு கல்வெட்டு மெய்கீர்த்தியுடன் பொறிக்கப்பட்டுள்ளது


கங்க நாட்டு தகடூர் நாட்டு பனைகுளத்து சிறுமுக்கூடல் முனிவர் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது தொறுமீட்டு என்ற சொல் வந்துள்ளதால் இது நடுகல் கல்வெட்டு எனக் கொள்ளலாம். மேலும் இந்த இரண்டு நடுகற்களின் நான்கு வரலாற்று செய்திகளுக்கும் ஒரு பொதுவான ஒற்றுமையை காண முடிகிறது இவை கங்கர் காலத்திலும் அ கங்கர் ஆட்சிபரப்பிற்குட்பட்ட பகுதிகளில் நடந்த நிகழ்வுகளாகும்.

பொதுவாக கங்க மண்டலம் எனப்படும் தென்கர்நாடக பகுதிகளில் ஊரின் ஒரு புறத்தை தேர்ந்தெடுத்து ஈமக்காடு போல் பாவித்து போரிலோ அல்லது ஊரைக் காப்பாற்றும் வீரச்செயல்களின் போது வீழ்ந்து பட்ட வீரர்களுக்கு நடுகல் எடுப்பித்தனர் அந்த பகுதியையே புனிதமாக கருதினர். சாம்ராஜ்நகர், மைசூர், தாளவாடியிலுள்ள பல கிராமத்திலும் தொன்மைகால ஈமச்சின்னங்கள்,நடுகற்கள் சதிகற்கள் செக்கு கல் ஆகியவை ஒரேயிடத்தில் அருகருகே கிடைப்பதை காண்கிறோம்.

மேலும் தொல்காப்பியத்தில் காண்கிறபடி காட்சி கால்கோள் நீர்படை நடுதல் என்ற படிநிலைகளில் நடுகல் செய்வதற்குரிய தேடி சென்று, மலையினின்று கல்லை வெட்டியெடுத்து நீராட்டி, தூய்மைபடுத்தி நட்டு சிறப்புகளை படைத்து வாழ்த்தி அதை தெய்வீக தன்மை கொண்ட கல்லாக புனிதமூட்டினர் என அறிகிறோம் எனவே புதிதாக ஒரு கல்லை தெரிவு செய்து இத்துணை சடங்குகளை நிகழ்த்துவதற்கு மாற்றாக ஏற்கெனவே அமைக்கப்பட்ட நடுகல்லின் மறுபுறத்தில் பிறிதொரு வீரனுக்கும் நடுகல் வடித்து வழிபட்டதால் இத்தகு அரிய நடுகற்கள் நமக்கு கிடைக்கின்றன எனக் கொள்ளலாம்!






பயணங்கள் தொடரும் 

15 December 2021

வேழக்காடுகளில்சோழச்சுவடுகள் - தலக்காடு மணலில் புதையுண்ட சோழர்கால கோயில்கள், கர்நாடக மாநிலம் / Karnataka

கட்டுரை ஆசிரியர்
திரு ஜான் பீட்டர், வரலாற்று ஆய்வாளர், தொல்லியல்துறை முன்னாள் அதிகாரி, மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர், தாளவாடி 

 ( சென்ற பதிவின் தொடர்ச்சி...)
மேலை கங்கர் சாசனங்களும், கன்னட சாஹித்யங்களும் தலைக்காட்டை தலவனபுரா,கஜ ஆரண்ய க்ஷேத்ரா,தலைக்காடு, கரிவனா(வேழக்காடுகள்) என பல பெயர்களில் அழைத்தாலும் சோழர் கால கல்வெட்டுகள் முடிகொண்ட சோழ மண்டலத்து "தழைக்காடான இராஜராஜபுரம்" என குறிப்பிட்டு இன்ன வள நாட்டை சேர்ந்தது என சுட்டவில்லை! ஆயினும் சாம்ராஜ்நகர் மாவட்டம் பெட்ட ஹள்ளி( தமிழ் கல்வெட்டுகளில் வேடன் பள்ளி) என்னும் ஊரிலுள்ள இரண்டாம் வீரபல்லாளன் காலத்திய தமிழ் கல்வெட்டொன்று தலக்காடு "மும்முடி கொண்ட சோழ மண்டலத்து இராஜேந்திர சோழ வளநாட்டு வடகரை நாட்டு தழைக்காடான இராஜராஜபுரம் என்ற வளநாட்டு பிரிவைச் சொல்கிறது.

தலக்காடு கோயில்கள்-:
ஹள கன்னட மொழி கல்வெட்டுகள் இவ்வூரை "ஹொய்சாள தேசத்தின் தக்ஷிண வாரணாசி" என குறிப்பிடுப்படுவதால் அக்காலத்தில் தலக்காடு ஏராளமான கோயில்கள் நிறைந்த ஊராக திகழ்ந்திருக்கும் என்பதையறியலாம்.
தற்போது வைத்தீஸ்வரர் கோயில் மரலீஸ்வரர் கோயில், பாதாளீஸ்வரர் கோயில், சௌடேஸ்வரி ஆலயம்,கீர்த்தி நாரயணண் கோயில் வீர பத்ரர் கோயில், கோகணேஸ்வரர் கோயில், கௌரிசங்கரர் கோயில் போன்றவை பக்தர்கள் வழிபாட்டில் உள்ளன. இவற்றுள் பாதாளீஸ்வரர் மற்றும் மரலீஸ்வரர் கோயில்கள் 10-11ம் நூற்றாண்டை சேர்ந்த கங்க-சோழ கலைப்பாணியென கோயில் கட்டிட முறை, சிற்பங்களின் வேலைப்பாடு ஆகியவற்றை கொண்டு உறுதி செய்யலாம் மேலும் இக்கோயில்களில் சோழர் கால கல்வெட்டுகளும் ஆவணப்படுத்ப்பட்டுள்ளது. மேலும் வைத்தீஸ்வரர் கோயில் சோழர் காலத்தில் (முதலாம் குலோத்துங்கன்) கட்டப்பட்டு விஜயநகர, மைசூர் உடையார் காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது கீர்த்தி நாராயணன் கோயில்() வரம் தரும் பெருமாள் 1117A.D.ஆண்டு சோழர் மீதான வெற்றியின் நினைவாக ஹொய்சாள மன்னன் விஷ்ணுவர்த்தனால் கட்டப்பட்டது ஏனையவை பிற்காலத்தியவை.

மண்ணுக்குள் புதையுண்ட சோழர் கால கோயில்கள்-:
மேற்காண் கோயில்களை தவிர தலக்காடு, தி.நரசிபுராவைச் சுற்றியுள்ள ஊர்களில் கிடைக்கும் கல்வெட்டு ஆவணங்கள் (எபி.கர்.மடலங்கள் 3,4,5) துணை கொண்டு ஆய்வு செய்தோமெனில் சோழர் காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படும் பல கோயில்கள்  தற்போது மணல் மேடுகளுக்குள் புதையுண்டிருக்கலாம் என்ற ஐயப்பாடு  எழுகின்றது. அவை:-

1. பெரிய நகரீஸ்வரமுடைய நாயனார் கோயில் ( சோழர் கால வணிகர்கள் எடுப்பித்தது)
2. வேலைக்காரேஸ்வரர் கோயில்
( அரச மெய்காப்பாளர் படை பிரிவினரால் கட்டப்பட்டிருக்கலாம்)
3.இராஜராஜேஸ்வரமுடையார் கோயில்.
இராஜராஜனின் காலத்தியது. இக்கோயிலில் திருவோணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது என்பதை கல்வெட்டு சான்றுகள் மூலம் அறிகிறோம்.)
4. அழகேஸ்வரமுடையார் கோயில்.
5. திரு பன்றீஸ்வரமுடையார் கோயில்.
6.சண்டிகேஸ்வரர் மற்றும் சண்டிகாம்பிகை கோயில்கள்.
7. தாண்டேஸ்வரர் கோயில்.
8.இராஜேந்திர சோழ விண்ணகரம்
9.இராஜேந்திர சோழ சதுர்வேதி மங்கலத்திலுள்ள வைகுந்த பெருமாள் கோவில் மற்றும் தில்லை நாதன் திருமண்டபம்.

சமணம் தழைத்தோங்கிய தலக்காட்டில் சைவ வைணவ கோயில்கள் மட்டுமல்லாமல் சோழர்கள் சமண பள்ளிகளையும் கட்டுவித்தனர்.
1.மஹா மேரு விடங்கன் பள்ளி
2.மால் வரி விடங்கன் பள்ளி
3. கஞ்சமங்கலம் உடையான் பள்ளி.

போன்றவையும் ஹொய்சாளர் காலத்தியதாக கருதப்படும் சைலஸ்வரர் கோயில், மல்லிகார்ஜூனசுவாமி, விக்னேஸ்வரா போன்ற கோவில்களும் மண்ணுக்குள் புதையுண்டிருக்கலாம்.

இங்ஙனம் ஏராளமான தொன்மை சின்னங்களும் புராதன கோயில்களும் மணலால் மூடப்பட்ட தலக்காட்டில் Directorate of Archeology and Museum in Karnataka மற்றும் Ancient History and Archaeology Dept.of University of mysore ம் இணைந்து பல்வேறு கட்டங்களாக அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நமது தற்போதைய தமிழக அரசும் தொல்லியல் துறையின் பால் அதீத நாட்டம் கொண்டு அகழாய்வுகள் பணிகளை முடுக்கி விட்டிருக்கும் இந்நிலையில் பழந்தமிழர் வணிகம் கலாச்சாரம் ஆட்சி நிர்வாகம் மேற்கொண்ட தமிழகம் தாண்டிய பகுதிகளான பாலூர்,வேங்கி, தலக்காடு  போன்ற இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை நடத்த போவதாக தெரிவித்துள்ளது.(பி.பி.ஸி.தமிழ் செப்.26. 21) புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் வரலாற்று துறை தமிழ்நாடு தொல்லியல் துறையுடன் இணைந்து செயலாற்றி வரும் பேராசிரியர் கே.இராஜன் இத்தகவலை வெளியிட்டுள்ளார் இது உள்ளமட்டிலும் வரவேற்க தாக்கதொன்றாகும். குறிப்பாக தலக்காடு மணல் மேடுகளுக்குள் பல நூறு ஆண்டுகளாக புதைந்து கிடக்கும் சோழர் தடயங்கள் வெளிச்சத்திற்கு வந்தால் பல அரிய வரலாற்று தரவுகள் கிடைக்க கூடும் என்பது திண்ணம்!