31 May 2020

வெண்கொற்றக்குடையும் தலைக்கோலியும்

கட்டுரை : திருமதி சக்தி பிரகாஷ்.
ஆய்வாளர், ஈரோடு
படம் வேலுதரண்
வெண்கொற்றக்குடை
மன்னர் ஆட்சி காலத்தில் அரசு சின்னங்களாக கொடி , குடை, முரசு , களிறு , தேர், செங்கோல், முடி ஆகியன இருந்தன. இவற்றில் குடை பற்றி காண்போம். சாதாரணமாக நாம் பயன்படுத்தும் குடை போல் அல்லாமல் மன்னர்களுக்கும், இறைவனுக்கும் பிடிப்பது "வெண்கொற்றக்குடை " ஆகும். கோயில்களில் விழாக் காலத்தில் உற்சவமூர்த்தியை வீதிஉலா அழைத்து செல்லும் போது குடை பிடிப்பது வழக்கம். அதேபோல் மன்னர்களுக்கும் இன்று நாம் கோயில்களில் காணும் குடை போன்ற குடை பயன்படுத்தபட்டு இருக்கிறது .

வெண் - வெள்ளை; கொற்றம் - வெற்றி; வெண்மையான பட்டினால் செய்யப்பட்ட குடை என்றும், இது வெற்றியின் அடையாளமாகவும் கருதப்பட்டது. போரில் எதிரி மன்னரின் குடையை சிதைப்பது அல்லது கைப்பற்றுவது வீரத்தின் அடையாளமாக கருதப்பட்டது. சிறப்பான இக்குடைகளை பிடிப்பதிலும் சில முறைகளை கடைபிடித்து உள்ளனர். அரசனுடைய குடை கோயில்களில் வலம் வரும் போது தாழ்த்தி பிடிக்கவேண்டும் என்றும், கடவுள் முதன்மையானவர் என்ற பொருளிலும் அதேசமயம் பேரரசன் மற்ற சிற்றரசர்களுடன் செல்லும் போது முன் வரிசையில் பேரரசனுடைய குடையை உயர்ந்தி பிடித்தவாரும் அவனுக்கு அடங்கிய சிற்றரசர் குடைகள் பின்னாலும் செல்ல வேண்டும் என்பது விதி .

இலக்கியகளிலும் குடையை பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது சிலப்பதிகாரத்தில் பல இடங்களில் "வெண்கொற்றக் குடை" பற்றி இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். புகார்க் காண்டத்தில் ,மங்கள வாழ்த்து பாடலில் சோழ மன்னனுடைய குளிர்ச்சியான வெண்கொற்றக் குடையை போன்று திங்களும் அழகிய பரந்த இவ்வுலகை பாதுகாத்து வருவதாக குறிப்பிடுகிறார். மதுரை காண்டத்தில் கண்ணகி நீதி கேட்க்கும் காட்சியில் திங்களை ஒத்த வெண்கொற்றக்குடையினையும் வாள் வலிமையினையும் உடைய பாண்டியனின் சிறப்பு அழிந்து விட்டதே என்று குறிப்பிடுகிறார்.



90 year old zamindar of devakottai being taken for first honour in Kalayarkoil. PIC: #Venkatesh_Ramakrishnan

ஓவியங்களில் வரும் வெண் கொற்றக் குடை :
பனைமலையில் இராஜசிம்ம பல்லவனால் உருவாக்கப்பட்ட தாளபுரீஸ்வரர் கோயிலின் கருவறையில் உள்ள பார்வதி ஓவியத்தில் சிவப்பு நிற பட்டு துணியினாலான அலங்கரிக்கப்பட்ட குடை காட்டப்பட்டுள்ளது.  திருப்பருத்திக்குன்றம் வர்த்தமான மகாவீரர் கோயிலில் உள்ள ஓவியத்தில், ரிஷப தேவர் வரலாறு சொல்லும் காட்சியில் அவர் துறவறம் மேற்கொள்ள அரண்மனையை துறக்கும் காட்சியில் அவருக்கு வெண்கொற்றக்குடை பிடித்து ஊர்வலமாக அழைத்துச் செல்லும் காட்சி காட்டப் பட்டுள்ளது. காஞ்சி கைலாசநாதர் கோயில் தெய்வ உருவ சிற்பங்களில் உள்ள குடைகளில் முத்து மாலை மற்றும் பூமாலையால் அலங்கரிக்கப்பட்ட குடை காட்டப்பட்டுள்ளது. இவை மற்றுமல்லாமல் பல கோயில் சிற்பங்களிலும் குடை காட்டப்பட்டுள்ளது.

பனைமலை , வெண்கொற்றக்குடையுடன் காட்சி தரும் பார்வதி


ரிஷபநாதர் வெண்கொற்றக்குடையுடன் செல்லும் காட்சி , திருபருத்திக்குன்றம் 
படம் :வேலுதரண்

இரண்டாம் சரபோஜி - மராத்திய ஓவியம்

கல்வெட்டுகளிலும் நடுகற்களிலும் குடைகள் இடம் பெறுகிறது. பல இடங்களில் குடையுடன் கூடிய நடுகல்லை நாம் பார்க்கிறோம். அரசன் அல்லது தலைவனுக்கான நடுகல் என்பதை குடை கொண்டு நாம் அறிந்து கொள்ள முடிகிறது. விக்கிரம்சோழன் மற்றும் குலோதுங்க சோழன் கல்வெட்டுகளிலும் குடை பற்றிய குறிப்புள்ளது .சங்க கால சோழர்களின் செம்பு காசுகளில் யானை உருவம் பொறிக்கப்பட்டு அதற்கு மேல் வெண்கொற்றக் குடை காட்டப்பட்டிருகிறது.


 நடுகற்களில் காணப்படும் வெண்கொற்றக்குடை ( Kolar )

                                            நாணயத்தில் வெண்கொற்றக்குடை

புராணகால அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரத்தில் குடை காட்டப்பட்டுள்ளது. நாமக்கல்லில் உள்ள குடைவரையில் வாமன உருவத்திற்கு குடை காட்டப்பட்டுள்ளது.



தலைக்கோலி :
போரில் எதிரி மன்னரின் வெண்கொற்ற குடையை கைப்பற்றி அதில் உள்ள காம்பை கொண்டு தலைக்கோல் செய்தனர் என்றும், நடனத்தில் சிறந்த மங்கையருக்கு அந்த தலைக்கோலியை பரிசாக தந்ததாக கூறப்படுகிறது.

சிலப்பதிகாரதில் மாதவிக்கு "தலைக்கோலி" பட்டம் தரும் காட்சியில் வெண் கொற்ற குடையில் செய்யப்பட்ட தலைக்கோலி பற்றி விவரிக்கபட்டுள்ளது.


"கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடை
வெயில்மறைக்  கொண்டன்றோ" (புற35)

இப்பாடலில் வானத்தில் ஓங்கி நிற்கும் கிள்ளி வளவனின் வெண்கொற்றக்குடை வெயிலை மறைக்க அன்று, குடிமக்களின் வருத்தத்தை போக்கி அருள் செய்வதற்கான அடையாளமாகும் என்று வெள்ளைக்குடி நாகனார் பாடுகிறார்.

வெண்கொற்றக்குடையால் செய்யப்படும் தலைக்கோலியுடன் ஆடல் மகளிர்

தொடரும்....

30 May 2020

மறைந்து கிடக்கும் மலையக வரலாறு


கவிகுடி பெருங்கற்காலகுகை,  நாயக்கர்கால கல்மண்டபம், ஹளெகன்னடம் பாறைக்கல்வெட்டு மேலும் பல செய்திகளுடன்....,  

ஜான் பீட்டர்.
முன்னால் தொல்லியல் துறை



கங்கர் காலத்திய ஆநிரை நடுகல்லை கண்டறிந்து புகைப்படம் எடுத்த பின்னர் கவிகுடி என்ற மலைக்குன்று கோயிலைக் காண நான், மனோ, மாணவன் அபிஷேக் மூவரும் இரு சக்கர வாகனங்களில் புறப்பட்டோம் சுமார் இரண்டு கி்மீ. வரை பயணப்பட்டு பழங்குடி இனத்தவர் (சோளகர்) வசிப்பிடத்தையடைந்தோம் அதற்கு மேல் இரு சக்கர வாகனத்தில் செல்லவியலாது என அறிந்தவுடன் வாகனங்களை அங்கேயே நிறுத்தி விட்டு ஒற்றையடி பாதையாக செல்லும் வனப் பகுதிக்குள் நடக்கலானோம் ....

அது கோடைக் காலமாதலால் வனம் பசுமையிழந்து மரம் செடி கொடிகள் உதிர்ந்து சருகுகள் விரவிக் கிடந்தன இவ்வாறு ஒரு மைல் காத தூரம் கடந்தவுடன் ஒரு காட்டாற்றையடைந்தோம் அது நீரின்றி வறண்டு கிடந்தது அங்கு பெருங்கற்கால கருவிகள் சிறிய அளவிலான கைக் கோடரிகள் (celt)சிலவற்றை சேகரித்தோம் இவை அக்காலத்தே இப்பகுதி பெருங்கற்கால மக்களின் வாழ்விடமாக இருந்திருக்கக்கூடிய சாத்திய கூறுகளை உணர்த்தியது.. அந்த வறண்ட காட்டாற்றை கடந்து முன்னாள் மாணவன் அபிஷேக் வழி காட்டி முன் செல்ல அவனை பின் தொடர்ந்து இருவரும் அந்த அடர் வனத்தின் நடுவே நடக்கத்தொடங்கினோம் பாதையில் காட்டு விலங்குகளின் எச்சங்களை கண்டும் அது மேற்கு மலைத்தொடர்ச்சி புலிகள் காப்பகம் என்பதை மனதிற் கொண்டும் கவனமுடன் பயணபட்டோம்.

சிறிது தொலைவில் காட்டின் நடுவேயிருந்த கல் மண்டபத்தை கண்டோம்.. அது கற்றூண்கள் தாங்கிய மேல்விதானத்தையும் சுற்றிலும் சுவரின்றி திறந்தவெளி யாக காட்சி தந்தது மண்டபத்தின் உட்புறத்திலும் நான்கு சிறு தூண்கள் அமைத்து சிறிய கருவறை போன்று அமைத்திருந்தனர் தூண்களில் நின்ற நிலையில் கைகளை கூப்பி வணங்குவது போன்ற ஆண் பெண் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருந்தது அவர்கள் இம்மண்டபத்தை கட்டிய நாயக்கர் மற்றும் அவரதுஅரசியராக இருக்கலாம் மேலும் அமர்ந்த நிலையில் ஐய்யனார் சிற்பமும் பசு லிங்கத்தை தழுவி நாவினாற் வருடுவது போன்ற சிற்பங்களும் அம்மண்டபத்தின் படிக்கட்டுகளின் இரு புறமும் யாளி உருவங்களும் பாங்குற செதுக்கப்பட்டிருந்தது.. இம்மண்டபம் அக்காலத்தே வழிபாட்டு தளமாக இருந்திருக்கலாம் ..

அங்கிருந்து சிறிது தொலைவில் கவிகுடி அமைந்துள்ள அந்த சிறு குன்றையடைந்தோம் மேலே நடந்து செல்வதற்கு ஏதுவாக கற்பலகைகளை படிகட்டுகள் போன்று அமைத்திருந்தனர் கவிகுடி என்ற அக்கோயில் மேற் புறத்தே மிகப்பெரிய பிரமாண்டமான பாறையால் மூடப்பெற்ற குகை அக்காலத்தே பெருங்கற்கால மக்கள் வாழ்விடமாக திகழ்ந்திருக்க வேண்டும் மேலும் அங்கிருந்து பார்க்கும் போது நாங்கள் நடந்து வந்த பாதை அந்த காட்டாறு மற்றும் அப்பகுதி வனம் முமுமையும் பார்க்க முடிகிறது எனவே இந்த குகையில் இருந்தவாறே பெருங்கற்கால வேட்டையின மக்கள் வன விலங்குகள் தென்படுகின்றனவா என நோட்டம் பார்க்கும் முக்கிய கண்காணிப்பு பகுதியாக (vantage point) இருந்திருக்க வேண்டும் தற்காலத்தில் அந்த குகையை மண்சுவற்யெழுப்பி பல அறைகளாக பிரித்து வழிபாட்டு தளமாக மாற்றியுள்ளனர். ஒரு அறையில் நந்திபகவானும் மறு அறையில் சிவ இலிங்கத்தையும் அமைத்து கவி குடி( கெவி- குகை குடி- கோயில்) என வழிபட்டு வருகின்றனர் குகையின் உட்புறத்தில் பாறை கீரல்கள் (petroglyphs)போன்று காணப்பட்டாலும் தொடர் வண்ணமடித்தலால் தெளிவாக தெரியவில்லை மேலும் கவிகுடி அமைந்துள்ள குகையின் மேற்புறம் கை கூப்பிய நிலையில் அடியார் சிற்பம் சிதைந்த நிலையில் காட்சி தருகிறது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சிவனடியார் இக்குகையில் தங்கி துறவு வாழ்வை மேற் கொண்டிருக்க வேண்டும். மேலும் கீழே நாம் கண்ட கல் மண்டபத்திலிருந்த நந்தி மற்றும் லிங்கத்தை பிற்காலத்தில் எடுத்து வந்து இங்கு வைத்து வழிபாடு செய்திருக்கலாம்.

மேலும் நமது ஆய்வின் போது பாறையின் மீது ஹளெ கன்னடமொழி கல்வெட்டும் கண்டறியப்பட்டது இவற்றின் எழுத்தமைதியைக் கொண்டு 1516 ம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது என கருதலாம் மேற்கொண்டு அந்த குன்றை சுற்றிலும் சமண தடயங்கள் ஏதும் உள்ளனவா என தேடினோம் கண்டறிய இயலவில்லை.. அப்போதே அந்தி சாயும் நேரமாகியதால் கவி குடியிலிருந்து விடை பெற்றோம்...











கவிகுடி பெருங்கற்காலகுகையை நோக்கி....

 


 
 ஹளெகன்னட கல்வெட்டு..





மேலும்.. தொடரும்...