29 December 2021

A Rare Hero Stone / இருவேறு நூற்றாண்டின் அரிதான நடுகற்ககள் / at Horalavadi, Nanjangudu, Mysore District, Karnataka.

கட்டுரை ஆசிரியர்
திரு ஜான் பீட்டர்

மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவிலிருந்து 5கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஹொரளவாடி பஞ்சாயத்து கிராமம்.இவ்வூர் கல்வெட்டுகளில் அலபூர் என்றும் ஹொரளவாடி சீமை எனவும் குறிப்பிடப்படுகிறது. இங்கு கங்கமன்னன் ஸ்ரீபுருஷாவின் கல்வெட்டு மற்றும் கங்கர் காலத்தை சேர்ந்த நடுகற்கள் கிடைப்பதால் அக்காலத்தில் தொன்மை சிறப்பு வாய்ந்த ஊராக திகழ்ந்திருக்கும். மேலும் இங்கு ஹளகன்னடமொழியில் அமைந்த 8ம் நூற்றாண்டு தானக் கல்வெட்டில் 10ம்நூற்றாண்டை சேர்ந்த மூன்றடுக்கு தலைபலிகல்லும் ஒரே கல்லில் வடிக்கப்பட்டிருப்பதாக ஆவணத்தில் (எபி.கர். மடலம்- 3) மூலம் அறிந்து அவற்றை காண விழைந்தேன்!.


மைசூரிலிருந்து 50கி.மீ பயணப்பட்டு நஞ்சன்கூடிலிருந்து பிரசித்திபெற்ற சுத்தூர் மடத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ள ஹொரளவாடியை வந்தடைந்தேன் ஆவணத்தில் பொம்மப்பா கோயிலின் வடபுற திசையில் இந்நடுகல் உள்ளதாக அறிந்து அக்கோயிலை பற்றி விசாரிக்கையில் தற்போது அக்கோயில் இடிந்த நிலையில் வழிபாட்டில் இல்லை என்பதையறிந்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் ஊர் பெரியவர் ஒருவர் உதவ முன் வந்தார் அவரை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஊருக்கு வெளியே ஒற்றையடி பாதையில் பயணித்து அக்கோயில் இருக்குமிடத்தை அடைந்தோம் நான்கு பலகை கற்களால் ஆன சிறு வீடு போன்ற பொம்மப்பா கோயில் தற்போது விழுந்து கிடந்தது அதன் அருகே அந்த நடுகல்லை தேடத் தொடங்கினோம் அருகேயுள்ள பள்ளத்தில் மேற்புறம் சிதைந்த நிலையில் பார்க்க முடிந்தது ஏறக்குறைய முக்கோண வடிவத்தில் காட்சி தந்த அந்த மூன்றடுக்கு நடுகல்லின் முதல் நிலையில் (கீழிருந்து மேலாக) தலைபலிவீரன் ஆசனம் போன்ற பீடத்தில் பத்மாசனத்திலோ அமர்ந்து கரங்களை கூப்பியவாறு அமர்ந்திருந்தான் அருகே சிரசை கொய்வதற்காக அரிவாளை ஓங்கியவாறு ஒருவனும் காட்சி தருகின்றனர் இரண்டாம் நிலையில் உயிர் நீத்த தலைபலிவீரன் இரு தேவகன்னியர்களின் தோள்களை யணைத்தவாறு விண்ணுலகிற்கு பறந்து செல்லும் காட்சி மூன்றாம் நிலையில் இருமருங்கும் தேவகன்னியர் நின்ற நிலையில் நடுவே தலைபலிவீரன் (அ) இந்திரன் சுகாசனத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருகின்றனர். நடுகல்லின் பின்புறத்தில் ஹளகன்னடமொழியில் அமைந்த எழுத்துக்கள் படிக்கவியலா வண்ணம் சிதைந்த நிலையில் காண முடிகிறது.

கல்வெட்டு செய்திகள் -; 
8ம்நூற்றாண்டு எழுத்தமைவில் பொறிக்கப்பட்டிருந்த ஹளகன்னடமொழி கல்வெட்டு கூறும் செய்தியாவது-: கெசில்மனே என்ற ஊரின் தலைவர்கள் ஒன்று கூடி ஏரிக்கரைக்கருகே உள்ள நஞ்சை நிலத்தை கொடையாக அமித்தபட்டதி மகன் சோமதி என்பவனுக்கு தானமாக வழங்கியதை கூறுவதால் இது நடுகல் கல்வெட்டாகயிருக்கலாம்.

அதே கல்வெட்டின் கீழே 10 நூற்றாண்டு எழுத்தமைதியில் அமைந்த கல்வெட்டு கூறும் செய்தி-: தலைபலிவீரனான எரேவின் மகன் பெனயிதா கார்கேவிற்கு பத்து கந்துகா நிலத்தை பல்லிகாலே சந்தையா என்பவன் தானமாக வழங்கியதை கூறும் இக்கல்வட்டு எக்காரணம் பொருட்டு தலை பலி கொடுத்தான் என்பதை குறிப்பிடவில்லை!

இந்த நடுகல் குறித்து தம்பி Kumaravel Ramasamy யிடம் பேசுகையில் இதே போன்று இரு வெவ்வேறு காலக்கட்டத்தை சேர்ந்த வரலாற்று செய்தியை தாங்கிய நடுகல் நம் தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ளது எனக் கூறி அந்நடுகல் பற்றிய குறிப்புகள் மற்றும் புகைப்படத்தையும் அனுப்பி வைத்தார். தர்மபுரி மாவட்டம் இண்டூர் என்னும் ஊரில் 8-9 நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்து நடுகல் கல்வெட்டில் கங்க அரசன் ஸ்ரீபுருஷாவின் கீழ் இப்பகுதியை ஆட்சி செய்த மாவலி வாணராயர் பூசலின் போது நான்கு வீரர்களுடன் போரிட்டு வீர மரணமெய்தியதன் நினைவாக நடுகல் எழுப்பபட்டதென கூறுகிறது. இதே நடுகல்லின் வீரனின் சிற்பத்தை செதுக்கி யெடுக்கப்பட்டு 11நூற்றாண்டை சேர்ந்த இராஜாதிராஜனின் 31 வது ஆட்சியாண்டு கல்வெட்டு மெய்கீர்த்தியுடன் பொறிக்கப்பட்டுள்ளது


கங்க நாட்டு தகடூர் நாட்டு பனைகுளத்து சிறுமுக்கூடல் முனிவர் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது தொறுமீட்டு என்ற சொல் வந்துள்ளதால் இது நடுகல் கல்வெட்டு எனக் கொள்ளலாம். மேலும் இந்த இரண்டு நடுகற்களின் நான்கு வரலாற்று செய்திகளுக்கும் ஒரு பொதுவான ஒற்றுமையை காண முடிகிறது இவை கங்கர் காலத்திலும் அ கங்கர் ஆட்சிபரப்பிற்குட்பட்ட பகுதிகளில் நடந்த நிகழ்வுகளாகும்.

பொதுவாக கங்க மண்டலம் எனப்படும் தென்கர்நாடக பகுதிகளில் ஊரின் ஒரு புறத்தை தேர்ந்தெடுத்து ஈமக்காடு போல் பாவித்து போரிலோ அல்லது ஊரைக் காப்பாற்றும் வீரச்செயல்களின் போது வீழ்ந்து பட்ட வீரர்களுக்கு நடுகல் எடுப்பித்தனர் அந்த பகுதியையே புனிதமாக கருதினர். சாம்ராஜ்நகர், மைசூர், தாளவாடியிலுள்ள பல கிராமத்திலும் தொன்மைகால ஈமச்சின்னங்கள்,நடுகற்கள் சதிகற்கள் செக்கு கல் ஆகியவை ஒரேயிடத்தில் அருகருகே கிடைப்பதை காண்கிறோம்.

மேலும் தொல்காப்பியத்தில் காண்கிறபடி காட்சி கால்கோள் நீர்படை நடுதல் என்ற படிநிலைகளில் நடுகல் செய்வதற்குரிய தேடி சென்று, மலையினின்று கல்லை வெட்டியெடுத்து நீராட்டி, தூய்மைபடுத்தி நட்டு சிறப்புகளை படைத்து வாழ்த்தி அதை தெய்வீக தன்மை கொண்ட கல்லாக புனிதமூட்டினர் என அறிகிறோம் எனவே புதிதாக ஒரு கல்லை தெரிவு செய்து இத்துணை சடங்குகளை நிகழ்த்துவதற்கு மாற்றாக ஏற்கெனவே அமைக்கப்பட்ட நடுகல்லின் மறுபுறத்தில் பிறிதொரு வீரனுக்கும் நடுகல் வடித்து வழிபட்டதால் இத்தகு அரிய நடுகற்கள் நமக்கு கிடைக்கின்றன எனக் கொள்ளலாம்!






பயணங்கள் தொடரும் 

15 December 2021

வேழக்காடுகளில்சோழச்சுவடுகள் - தலக்காடு மணலில் புதையுண்ட சோழர்கால கோயில்கள், கர்நாடக மாநிலம் / Karnataka

கட்டுரை ஆசிரியர்
திரு ஜான் பீட்டர், வரலாற்று ஆய்வாளர், தொல்லியல்துறை முன்னாள் அதிகாரி, மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர், தாளவாடி 

 ( சென்ற பதிவின் தொடர்ச்சி...)
மேலை கங்கர் சாசனங்களும், கன்னட சாஹித்யங்களும் தலைக்காட்டை தலவனபுரா,கஜ ஆரண்ய க்ஷேத்ரா,தலைக்காடு, கரிவனா(வேழக்காடுகள்) என பல பெயர்களில் அழைத்தாலும் சோழர் கால கல்வெட்டுகள் முடிகொண்ட சோழ மண்டலத்து "தழைக்காடான இராஜராஜபுரம்" என குறிப்பிட்டு இன்ன வள நாட்டை சேர்ந்தது என சுட்டவில்லை! ஆயினும் சாம்ராஜ்நகர் மாவட்டம் பெட்ட ஹள்ளி( தமிழ் கல்வெட்டுகளில் வேடன் பள்ளி) என்னும் ஊரிலுள்ள இரண்டாம் வீரபல்லாளன் காலத்திய தமிழ் கல்வெட்டொன்று தலக்காடு "மும்முடி கொண்ட சோழ மண்டலத்து இராஜேந்திர சோழ வளநாட்டு வடகரை நாட்டு தழைக்காடான இராஜராஜபுரம் என்ற வளநாட்டு பிரிவைச் சொல்கிறது.

தலக்காடு கோயில்கள்-:
ஹள கன்னட மொழி கல்வெட்டுகள் இவ்வூரை "ஹொய்சாள தேசத்தின் தக்ஷிண வாரணாசி" என குறிப்பிடுப்படுவதால் அக்காலத்தில் தலக்காடு ஏராளமான கோயில்கள் நிறைந்த ஊராக திகழ்ந்திருக்கும் என்பதையறியலாம்.
தற்போது வைத்தீஸ்வரர் கோயில் மரலீஸ்வரர் கோயில், பாதாளீஸ்வரர் கோயில், சௌடேஸ்வரி ஆலயம்,கீர்த்தி நாரயணண் கோயில் வீர பத்ரர் கோயில், கோகணேஸ்வரர் கோயில், கௌரிசங்கரர் கோயில் போன்றவை பக்தர்கள் வழிபாட்டில் உள்ளன. இவற்றுள் பாதாளீஸ்வரர் மற்றும் மரலீஸ்வரர் கோயில்கள் 10-11ம் நூற்றாண்டை சேர்ந்த கங்க-சோழ கலைப்பாணியென கோயில் கட்டிட முறை, சிற்பங்களின் வேலைப்பாடு ஆகியவற்றை கொண்டு உறுதி செய்யலாம் மேலும் இக்கோயில்களில் சோழர் கால கல்வெட்டுகளும் ஆவணப்படுத்ப்பட்டுள்ளது. மேலும் வைத்தீஸ்வரர் கோயில் சோழர் காலத்தில் (முதலாம் குலோத்துங்கன்) கட்டப்பட்டு விஜயநகர, மைசூர் உடையார் காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது கீர்த்தி நாராயணன் கோயில்() வரம் தரும் பெருமாள் 1117A.D.ஆண்டு சோழர் மீதான வெற்றியின் நினைவாக ஹொய்சாள மன்னன் விஷ்ணுவர்த்தனால் கட்டப்பட்டது ஏனையவை பிற்காலத்தியவை.

மண்ணுக்குள் புதையுண்ட சோழர் கால கோயில்கள்-:
மேற்காண் கோயில்களை தவிர தலக்காடு, தி.நரசிபுராவைச் சுற்றியுள்ள ஊர்களில் கிடைக்கும் கல்வெட்டு ஆவணங்கள் (எபி.கர்.மடலங்கள் 3,4,5) துணை கொண்டு ஆய்வு செய்தோமெனில் சோழர் காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படும் பல கோயில்கள்  தற்போது மணல் மேடுகளுக்குள் புதையுண்டிருக்கலாம் என்ற ஐயப்பாடு  எழுகின்றது. அவை:-

1. பெரிய நகரீஸ்வரமுடைய நாயனார் கோயில் ( சோழர் கால வணிகர்கள் எடுப்பித்தது)
2. வேலைக்காரேஸ்வரர் கோயில்
( அரச மெய்காப்பாளர் படை பிரிவினரால் கட்டப்பட்டிருக்கலாம்)
3.இராஜராஜேஸ்வரமுடையார் கோயில்.
இராஜராஜனின் காலத்தியது. இக்கோயிலில் திருவோணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது என்பதை கல்வெட்டு சான்றுகள் மூலம் அறிகிறோம்.)
4. அழகேஸ்வரமுடையார் கோயில்.
5. திரு பன்றீஸ்வரமுடையார் கோயில்.
6.சண்டிகேஸ்வரர் மற்றும் சண்டிகாம்பிகை கோயில்கள்.
7. தாண்டேஸ்வரர் கோயில்.
8.இராஜேந்திர சோழ விண்ணகரம்
9.இராஜேந்திர சோழ சதுர்வேதி மங்கலத்திலுள்ள வைகுந்த பெருமாள் கோவில் மற்றும் தில்லை நாதன் திருமண்டபம்.

சமணம் தழைத்தோங்கிய தலக்காட்டில் சைவ வைணவ கோயில்கள் மட்டுமல்லாமல் சோழர்கள் சமண பள்ளிகளையும் கட்டுவித்தனர்.
1.மஹா மேரு விடங்கன் பள்ளி
2.மால் வரி விடங்கன் பள்ளி
3. கஞ்சமங்கலம் உடையான் பள்ளி.

போன்றவையும் ஹொய்சாளர் காலத்தியதாக கருதப்படும் சைலஸ்வரர் கோயில், மல்லிகார்ஜூனசுவாமி, விக்னேஸ்வரா போன்ற கோவில்களும் மண்ணுக்குள் புதையுண்டிருக்கலாம்.

இங்ஙனம் ஏராளமான தொன்மை சின்னங்களும் புராதன கோயில்களும் மணலால் மூடப்பட்ட தலக்காட்டில் Directorate of Archeology and Museum in Karnataka மற்றும் Ancient History and Archaeology Dept.of University of mysore ம் இணைந்து பல்வேறு கட்டங்களாக அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நமது தற்போதைய தமிழக அரசும் தொல்லியல் துறையின் பால் அதீத நாட்டம் கொண்டு அகழாய்வுகள் பணிகளை முடுக்கி விட்டிருக்கும் இந்நிலையில் பழந்தமிழர் வணிகம் கலாச்சாரம் ஆட்சி நிர்வாகம் மேற்கொண்ட தமிழகம் தாண்டிய பகுதிகளான பாலூர்,வேங்கி, தலக்காடு  போன்ற இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை நடத்த போவதாக தெரிவித்துள்ளது.(பி.பி.ஸி.தமிழ் செப்.26. 21) புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் வரலாற்று துறை தமிழ்நாடு தொல்லியல் துறையுடன் இணைந்து செயலாற்றி வரும் பேராசிரியர் கே.இராஜன் இத்தகவலை வெளியிட்டுள்ளார் இது உள்ளமட்டிலும் வரவேற்க தாக்கதொன்றாகும். குறிப்பாக தலக்காடு மணல் மேடுகளுக்குள் பல நூறு ஆண்டுகளாக புதைந்து கிடக்கும் சோழர் தடயங்கள் வெளிச்சத்திற்கு வந்தால் பல அரிய வரலாற்று தரவுகள் கிடைக்க கூடும் என்பது திண்ணம்!







10 October 2021

வேழக்காடுகளில்சோழச்சுவடுகள் - Sri Mahaligeswarar Temple & Sri Chamundeeswari Amman Temple, ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோயில், சாமுண்டீஸ்வரி கோயில், ஹொன்னூர் / Honnur, Chamrajnagar District, Karnataka

கட்டுரை ஆசிரியர்
திரு ஜான் பீட்டர், வரலாற்று ஆய்வாளர், தொல்லியல்துறை முன்னாள் அதிகாரி, மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர், தாளவாடி 

சாம்ராஜ்நகரிலிருந்து தலக்காடு செல்லும் சாலையில் எலந்தூர் தாலுகாவிற்கு முன்பாக 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஹொன்னூர் என்னும் பெயருடைய இச்சிறு கிராமம். இவ்வூர் பழந்தமிழ் கல்வெட்டுகளில் "முடிகொண்டசோழமண்டலத்து கங்கை கொண்ட சோழவளநாட்டு பதிநாட்டு பொன்னூர்" என குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் 12 நூற்றாண்டு ஹொய்சாளர் தமிழ் கல்வெட்டில் இவ்வூரானது "பொன்னூரான துளுவமாதேவி சதுர்வேதிமங்கலம்" என்று பிரமதேயமாக  விளங்கியதையும் காண்கிறோம்.

கோயில்கள் -:
இங்கு தற்போது ஹொய்சாளர் காலத்தை சேர்ந்த மஹாலிங்கேஸ்வரர் கோயில், சாமுண்டீஸ்வரி திருக்கோயில், கங்க தேசத்தின் நாட்டார் தெய்வமான இராக்காசம்மா நவர சன்னதி போன்றவை அமைந்துள்ளது.

கல்வெட்டுகள்-; கங்கர் கால ஆநிரைமீட்டல் நடுகல் கல்வெட்டு, சோழர் கால வணிக கல்வெட்டு, ஹொய்சாளர் கால தமிழ் மற்றும் ஹள கன்னடமொழி கல்வெட்டுகளுமாக மொத்தம் 7கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு எபி.கர்.மடலம் நான்கு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வெட்டு செய்திகள்-:
பொ.யு.10ம் நூற்றாண்டை சார்ந்த கங்க அரசன் பெர்மானடியின் 3 ம் ஆட்சியாண்டு ஹள கன்னட மொழி நடுகல் கல்வெட்டொன்று இவ்வூரை சேர்ந்த பொன்னவய்யா என்ற வீரன் கள்வர்கள் ஆநிரைகளை கவர்ந்து சென்ற போது அவர்களுடன் ஏற்பட்ட பூசலின்றி காரணமாய் உயிர் துறந்து விட்டதால் அவனின் சகோதரனால் எடுப்பிக்கப்பட்டது இது ஆநிரைமீட்டல் நடுகல்லாகும்.

சோழர் கால வணிகர்கள் கல்வெட்டு-:
பண்டைய காலத்தில் இங்கு சோழர் கால வணிகர் குழுக்களான நானாதேசிகர் பதிணென்பூமி விஷயத்தார், திசையாயிரத்து ஐந்நூற்றுவர் போன்றோர் பரவலாக வசித்து வந்ததும் பொன்னூர் மட்டுமின்றி பதிநாட்டு பல்வேறு ஊர்களிலுள்ள கோயில்களுக்கு நிவந்தம்,தானங்களை வழங்கி நாட்டு நற்பணியில் சிறந்து விளங்கியதையும் இங்கு கிடைக்கப் பெறும் தமிழ் கல்வெட்டுகள் மூலமாக அறியற்பாலாகிறது.

11 ம் நூற்றாண்டு சோழர்கால தமிழ் கல்வெட்டொன்று கங்கை கொண்ட சோழவளநாடு பொன்னூர் பதிணென்பூமிநாட்டார் திசையாயிரத்து ஐந்நூற்றுவர் குழுவை சேர்ந்த நானாதேசியன் அம்பலவாணன் என்பவன் தழைக்காடு எ இராஜராஜபுரத்திலிருக்கும் பெரியநகரீஸ்வரமுடைய நாயனார்க்கு தேவதானமாக நஞ்சை நிலத்தை கொடையாக வழங்கியதும் இத் தன்மத்திற்கு சாட்சியாக வீரகங்கரசர், இராஜேந்திர பெருமாடி, பன்ம காமுண்டா, இருமடி உத்தம சோழா போன்றோர் கையொப்பமிட்டதையும் கூறுகிறது. இதே காலத்தை சேர்ந்த சிதைந்த நிலையிலுள்ள தமிழ் கல்வெட்டொன்று பதிநாட்டு வேலாபுரம் திசையாயிரத்து ஐந்நூற்றுவர் பற்றி குறிப்பிடப்படுகிறு ஆனால் வேலாபுரம் என்றழைக்கப்பட்ட பகுதி தற்போது யாதென அறியகிடக்கவில்லை!.

ஹொய்சாளர் கால தமிழ் கல்வெட்டுகள்-:
12 ம் நூற்றாண்டு ஹொய்சாளர் கால தமிழ் கல்வெட்டு பொன்னூரைச் சேர்ந்த "பரதேசி மலையரசன் சிறுமயன் கோட்டுபுக்கன்" என்பவன் இங்கு தண்ணினேரி என்ற பெயரில் ஏரியை வெட்டுவித்து அம்பல ( மண்டபம்) த்தையும் கட்டுவித்தான் என குறிப்பிடுகிறது தற்போது இந்த ஏரி கெங்கெரே என அழைக்கப்படுகிறது. ஏரியின் கரைப்பகுதியில் தான் கங்கர் மற்றும் சோழர் கால கல்வெட்டுகள் காணக்கிடைத்ததாக ஆவணத்தில் குறிப்பிடப்படுகிறது ஆனால் கட்டுரையாளரின் கள ஆய்வின் போது அந்த ஏரியின் நிலப்பரப்பு பகுதிகள் சிலவற்றை தனியார் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் மேற்கொண்டு வருவதும் தெரியவந்தது மேலும் எஞ்சிய பகுதிகளில் புதர் மண்டி முட்செடிகள் நிறைந்து காணப்பட்டதால் எவ்வளவு முயன்றும் அந்த சோழர் வணிக குழுவினர் கல்வெட்டுகளை கண்டறியவியவில்லை! ஆனால் அங்கு நடுகற்கள் உதிரி சிற்பங்கள் சிலவற்றை காணமுடிந்தது.

இங்குள்ள மஹாலிங்கேஸ்வரர் கோயில்
ஹொய்சாளார் காலத்தியது தற்போது முற்றிலும் புனரமைக்கப்பட்டு வண்ணம் பூசிய நிலையில் காட்சிதருகிறது மேலும் இக் கோயிலின் வட திசையில் பலகை கல்லில் தமிழ் மொழி கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இது ஹொய்சாள பேரரசன் இரண்டாம் வீரபல்லாளனின் பொ.யு.1191 ஆட்சியாண்டு கல்வெட்டாகும் இதில் இவ்வூரானது பொன்னூரான துளுவமாதேவி சதுர்வேதி மங்கலம் என குறிப்பிடப்பட்டுள்ளது தக்காணச்சக்கரவர்த்தி என்று போற்றப்படும் இரண்டாம் வீரபல்லாளன் துளு நாட்டை வெற்றி கொண்டு அந்நாட்டு அரசியை மணந்திருந்தான் தமக்கு முன்னதாக கங்க மண்டலத்தை ஆட்சி செய்த சோழர்களை அடியொற்றி ஹொய்சாள அரசர்களும் தமது அரசியின் பெயரில் சதுர்வேதி மங்கலம் அமைத்தை இங்கு காண்கிறோம்!


மேலும் இக்கல்வெட்டில் அபாதிருண காமுண்டன் மகன் மார காமுண்டன் என்பவன் கங்கை கொண்ட சோழவளநாட்டு சதுர்வேதி மங்கலமான அகரா என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் குலசேகரநாயனமுடையார்க்கும் மற்றும் தேவியரான துர்க்கை அம்மனுக்கும் ஸ்ரீதானமாக நிலத்தை தானமாக வழங்கியதையும் குறிக்கிறது.

25 June 2021

வேழக்காடுகளில் சோழச்சுவடுகள் - இராமேஸ்வரர் திருக்கோயில், தேபூரு, மைசூர்.

சொர்ணபூமியாம் கர்நாடகத்தின் தொன்மை கூறும் நல்லுலகம் B.L.ரைஸ் என்ற தொல்லியல் அறிஞருக்கு மெத்தவும் கடமைப்பட்டிருக்கிறது. கர்நாடகத்தில் தொல்பொருள்ஆய்வுதுறை இயக்குநராக 20 ஆண்டுகளாக(1885-1906) பணியாற்றிய  இவர் பழைய மைசூர் சமஸ்தானத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 9367 கல்வெட்டுகளை கண்டறிந்து அவற்றை அச்சிலேற்றி எபிகிராபிகா கர்நாடிகா என்ற பெயரில் 12 மடலங்களாக வெளியிட்டார். இந்த மகத்தான பணியை அடியொற்றி இவரின் சீடர் R.நரசிம்மாச்சார் (1906-26) மைசூர் பகுதிகளில் ஆய்வுகளை நடத்தி மேலும் பல கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு ஆவணங்களாக வெளிவந்தது இவ்விரு மேதைகளின் கடும் உழைப்பின் அடித்தளத்தில்தான் கர்நாடக சரித்திரத்தின் சாரம்சம் கட்டமைக்கப்பட்டுள்ளது எனலாம். அதிலும் குறிப்பாக ஒரு நூற்றாண்டிற்கு மேலாக கர்நாடகத்தில் ஆட்சிபுரிந்த சோழர்களின் தடயங்கள் வெளிஉலகிற்கு அறியபடாமலே போயிருக்கும்.

சோழர்கள், தமிழகத்தில் கட்டிய பிரம்மாண்ட கோயில்கள் போலன்றி இங்கே எளிமையான ஒற்றைதளி கோயில்களையே கட்டுவித்தனர். அவற்றில் ஒன்றிரண்டை தவிர ஏனைய கோயில்கள் பிற்கால அரச வம்சத்தவரால் புனரமைப்பு மற்றும் விரிவாக்க பணி மேற்கொள்ளப்பட்டாமல் வெறுமனே விடப்பட்டு சிதைந்த நிலையிலுள்ளது. கல்வெட்டுகளும் தமிழகத்தை போல அதிட்டானத்திலும் கோயில் சுவர்களிலும் வெட்டபடாமல் துண்டு பலகை கற்களில் தங்கள் நிலதானம் மற்றும் கொடைகளை கல்வெட்டுகளாக பொறித்து கோயில் முன்பு நட்டு வைத்தனர். அவை  காலவோட்டத்தில் உடைந்து துண்டுகளாகி மாயமாகி போனதுB.L.ரைஸ் மற்றும் நரசிம்மாச்சார் அவர்களின் ஆய்வுக்கு பின்னர் ஏறத்தாழ நூற்றாண்டுக்கு மேல் சோழர் கோயில்கள் கல்வெட்டுகள் பற்றிய நேரடி கள ஆய்வு மேற்கொண்டதாக அறிய இயலவில்லை

எனவே நாம் மைசூரில் வசிப்பதாலும் பணி நிமித்தமாக தாளவாடிக்கு அடிக்கடி பயணப்படுவதாலும் இச் சோழர் காலக்கோயில்களை நேரிடையாக சென்று காணும் பேறு பெற்றேன் அவற்றை "வேழக்காடுகளில் சோழச்சுவடுகள்" என முகநூலில் பதிவிட்டும் வருகிறேன்! அவ்வகையில் இம்முறை நஞ்சன்கூடுக்கருகே தேபூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள முதலாம் குலோத்துங்கன் காலத்திய கோயிலுக்கு செல்வது என முடிவெடுத்து அதிகாலையிலேயே புறப்பட்டேன். பொதுவாக ஆவணங்களின் குறிப்புகள் துணை கொண்டு செல்லும் அக்கோயில்களின் வழியை முதலில் கண்டறிவது கடினம் பெரும்பாலும் பிரசஸ்தி பெறாத கோயில்களில் மூன்று கால வழிபாடு நடைபெறாது ஊர் பெரியவர் ஒருவர் ( லிங்காயத்து வகுப்பினர்) பூசாரியாக பொறுப்பேற்றிருப்பார். காலை வேளையில் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்தபின்னர் தனது சொந்த வேலையை கவனிக்க சென்று விடுவார்அதன்பிறகு கோயில் மூடியிருக்கும் மேலும் செல்லும் வழிகளில் தென்படும் நடுகற்களை படமெடுப்பதும் காலைவெளிச்சத்தில் சுலபம் ஏனெனில் நடுகற்கள் கிழக்கு திசை நோக்கியே அமைந்திருக்கும் இக்காரணங்கள் பொருட்டே காலை பயணம் உசிதமானது என கருதுகிறேன்!

தேபூரு மைசூரிலிருந்து தெற்காக 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது முதலில் நஞ்சன்கூடு சென்று அங்கிருந்து குண்டல்பேட்டை செல்லும் சாலையில் 7 கி.மீ தொலைவிலுள்ள தேபூரை சென்றடைந்து அக்கோயில் குறித்து விசாரிக்கையில் ஊருக்குள் இல்லாமல் குடியிருப்பிற்க்கு வெளியில் உள்ளது என அறிந்து மகிழ்ச்சி கொண்டேன்!. ஊராரின் சந்தேக கண் கொண்ட பார்வைகள் கிடுக்கிபிடி கேள்வி கணைகள் போன்ற அசௌரியம் ஏதுமின்றி சுதந்திரமாக கோயிலைச் சுற்றி வரலாம் என ஆனந்தத்துடன் பயணத்தை தொடர்ந்தேன்சிறிது தொலைவு சென்றவுடன் இராமேஸ்வரர் கோயில் செல்லும் வழி என்ற பெயர் பலகையை கண்டு வலது புறத்தில் திரும்பியவுடன் அங்கு கபினி ஆறு சிறு ஓடையாக பிரிந்து சென்று கொண்டிருந்தது அதன் மேல் அமைக்கப்பட்ட பாலத்தின் மீது ஏறி கடந்து ஒரு ஒற்றையடி செம்மண் பாதையை அடைந்தேன்! காலை நேரமாதலால் சிறுவர்கள் பாலத்தின் மேலிருந்து நீருக்குள் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர்!

தேபூரு கபினி ஆறு பாய்ந்தோடும் கரையில் அமைந்த செழிப்பான ஊர் என்பது புலப்படலாயிற்று. சோழர்கள் சங்க காலத்தில் வளவன் என அழைக்கப்பட்டதும் வளமான பகுதிகளை ஆட்சி பரப்பாக கொண்டவர்கள் என்பதை அந்நிய மாநிலத்திலும் நான் அறிய நேரிட்டது! ( இதற்கு தானா ஆசைப்பட்டாய் அருண் மொழிவர்மா?)

ஒற்றையடி பாதையில் இருமருங்கும் பசும்போர்வை போர்த்தியது போன்று பச்சை பசேல் என வயற்பரப்பு.கபினி ஆற்றுநீர் வாய்க்காலில் சலசலவென வழிந்தோடும் போது எழும் இனிமையான ஓசை! இளங்காலை பொழுது ஆதவனின் கதிர்கள் பயிர்களின் படிந்திருக்கும் பனித்துளியில் பட்டு தெறிக்கும் ஒளிக்கீற்றும் சோழர் கோயில் காண போகிறோம் என்ற உற்சாகமும் மனதில் தொற்றிக் கொள்ள 2 கி .மீ மேல் அந்த ஒற்றையடி பாதையில் பயணித்து இராமேஸ்வரர் கோயில்வந்தடைந்தேன்வாழை,கமுகு, தென்னை தோப்புகளின் அருகில் பெரிய அரச மரத்தின் கீழ் கோயில் அமைந்திருந்தது முற்றிலும் புதிதாக கட்டப்பட்டிருந்தது( T.V.S குழுமத்தினர் பொருளுதவி செய்தனர் என்பதை அறிந்து கொண்டேன் இதே போன்று சிந்துவல்லி என்ற ஊரில் சிதைந்த நிலையிலுள்ள சோழர் கால கோயில் கட்டுவதற்கும் பொருளுதவி செய்ததை குறிப்பிட்டுள்ளேன்!) சோழர் கால கட்டிடகூறுகளின் எச்சங்கள் ஏதுமின்றி முற்றிலும் மாற்றப்பட்ட நிலையில் இவ்வூரார் மெச்சதக்க ஒரு செயலை செய்துள்ளனர். கோயில் புனரமைப்பின் போதுஉடைந்த நிலையில் ஆங்காங்கே சிதறி கிடந்த நடுகற்கள் கல்வெட்டுகளைசேகரித்து கோயிலின் முன்புறத்தில் வரிசைகிரமமாக நட்டு வைத்துள்ளனர்.

கர்நாடகத்தில் பல கோயில்களில் ஆவணத்தில் குறிப்பிடப்படும் கல்வெட்டுகள் மாயமாகி போன நிலையில் இங்கு அப்படியே கிடைப்பது உள்ளமட்டிலும் மனதிற்கு பெரும் மகிழ்ச்சி தந்த நிகழ்வாகும்கங்கர் கல்வெட்டுகள் ÷ கங்கர் காலத்தை சேர்ந்த இரண்டு கல்வெட்டுகளும் சோழர் காலத்தை சேர்ந்த இரண்டு கல்வெட்டு களும் ( fragmentary inscriptions) இங்கு காணக்கிடைக்கின்றன. கங்க அரசன் சிவமாறனின் கல்வெட்டு (பொ.யு.8நூ) நஞ்சை நிலம் தானமாக வழங்கியதையும் அக்காலத்தில் இவ்வூர்  புன்னாடு6000 என்ற நாட்டை சேர்ந்தது என்பதையும் குறிப்பிடுகிறது மேலும் மற்றொரு ஹள கன்னட மொழி கல்வெட்டு கங்க அரசன் ராச்சமல்ல பெருமானடி ( பொ.யு.9ம் நூ) காலத்தை சேர்ந்தது. கங்கர் காலத்தை சேர்ந்த இக்கோயில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் மீண்டும் புனரமைப்பு செய்து கட்டப்பட்டிருக்கலாம்

சோழர் கால கல்வெட்டுகள் ÷ முதலாம் குலோத்துங்க சோழனின்" புகழ்மாதுவிளங்க செயமாது விரும்ப" என்ற மெய்கீர்த்தி முப்பத்தொன்றாவது ஆட்சி யாண்டை (1100-01A.D) குறிப்பிட்டு அக்காலத்தில் இவ்வூர் மும்முடி சோழ மண்டலத்தை சேர்ந்தது என்பதையும் கூறுகிறது.

மற்றொரு ஆட்சியாண்டு குறிப்பிடாத ஏறத்தாழ இதே கால கட்டத்தை (பொ.யு12 நூற்றாண்டு) சேர்ந்த சிதைந்த கல்வெட்டு இக்கோயிலுக்கு வழங்கிய நிலதானம் பற்றி குறிப்பிடப்படுகிறது கல்வெட்டு ÷

1....ளர்கள் மு(ன்)..
2....(ணி)யரும் சகர யாண்...
3.... மூன்று சென்ற விக்கிர()...
4...ங்குனி உத்திரத்துத் திருவி...
5..யார் தீ()த்தம் பிரசாதித்.....
6..ருந்த திருவோலக்க-மண்ட
7...யிருந்து செய்த தன்மகாரிய..
8...களூர்த்- திருவீராமீஸ்வரமுடைய...
9...எங்கள் முதுக்கன் விட்டு அன்...
10..(மு)ன்()தியாய் வருகிற தேவதான..
11..(னு)வாகி...ர் கோயிலுக்கு கிழக்கு
12....ம்மா(தே)கால்லுக்கு மேற்கும்தெ
13....நட்டு நின்ற புண்ணக...
14...ற்கு -கான()ற்கு நெ..(ழு)ந்..
15...யில் (வாய்பும்)..
16....(நோக்கி) வந்த ...
17..(தோ)ம் இந்நிலத்தால் வி...
18.விற்ரமரும் நாங்களும் ()...
19..த்தோம் இந்த ஸ்தானம் உடைய ()..
20...ஊராரேய் இபோகங் கை-கொ(ண்
21.ந்த தன்மம் ரக்ஷிக்க-கடவார் இவர் வச
22. ம் விட்டோம் இந்த தேவதானம் வி
23..ளைந்த போகத்துக்கு வந்த குறைவுநி
24.றைவு உளவாகில் நாங்களே தந்தது நி
25.லை நிறுத்தி இத்தன்மம் (சோ)ட்டன்வைக்க()
26.டவோம்-ஆகவும் இந்த தன்மம் அழிப்பான் கங்கை
27.கரையில் கவிலைக்-கொன்ற பிரம
28. வத்தி எய்துவான் அறமாறவர்க்கு கறமல்லாது துணையி
29.ல்லை00ஊர்புகில் புட்டிகையும் இவ்வூரில் விளை
30.ந்த போகத்தில் சிற்றூரையும் விட்டோம்....

கல்வெட்டு செய்தி ÷
(எனது ஆசான் கல்வெட்டறிஞர் இராஜகோபால் ஐயா அவர்களின் விளக்கம்....)
சக ஆண்டு/விக்கிரம ஆண்டு =பொ..11001160. பங்குனி உத்திரதிருவிழா இறுதியில் தெய்வம் புண்ணிய தீர்த்தமாடி, ஒலக்க மண்டபத்தில்( கொலுமண்டபம்) இருந்த போது இந்த தர்ம செயலை முடிவு செய்துள்ளனர் அதன்படி திருவீராமீஸ்வரமுடையார் கோயிலுக்கு கோயில்/ஊர் பொறுப்பிலும் நிலங்கள் தவிர்த்து அவர்கள் வழியாக வருகிற தேவதான நிலங்களுக்கு (முன்வதி) வரிச்சலுகை/ வருவாய் தர ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிகிறது. அந்த குறிப்பிட்ட நிலத்தின் நான்கு எல்லைகளும் கூறப்பட்டுள்ளது. வாகீஸ்வரர் கோயிலுக்கு கிழக்கு.. கால்லுக்கு மேற்கு , என்று குறிப்பிடப்பட்டுள்ளதுஒரு எல்லையில் புண்ணகம் நட்டு நின்றுள்ளது இது செண்பகம் புன்னை மரமாகலாம் வேறுவகையில் நடப்பட்ட எல்லை கல்லாகலாம். வில்தமர், நாங்கள் (ஊரார்) கோயில் ஸ்தானத்தார் நிலபோகம் ( விளைச்சல்) கொண்டு பரிபாலிக்க வேண்டும். இந்த போகம் கையில் கொண்டு விளைச்சல் கூடுதல் குறைவு என்றாலும் அவர்கள் சரி செய்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும்ஊர் புகுவாரிடம் பெறும் புட்டிகைவரி நிலவிளைச்சலுக்காண சிற்றுரைவரி ஆகியனவும் வழங்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு இறுதியில் வருகின்ற "அறமாறவர்க்கு அறமல்லாது துணையில்லை" என்ற சொற்றொடரானது கர்நாடகத்தில் வணிககுழுவினர் தானக் கல்வெட்டுகளில் பயின்று வருவதை காண்கிறோம்

கட்டுரை
ஜான் பீட்டர், தாளவாடி





















தொடரும்...