1 November 2020

சிந்துவல்லி.... வேழக் காடுகளில் சோழச் சுவடுகள்

கட்டுரை:
ஜான் பீட்டர்
முன்னாள் தொல்லியல் துறை
 
கவேர கன்ய சகியனான ராஜராஜன் தலைகாவேரியாம்

குடகு நாட்டையும் அது பாயந்தோடி கழனியெல்லாம் வளமான கங்கநாட்டையும் கைக் கொண்டதில் வியப்பேதுமில்லை! C.H.நகர் கெம்பணபுராவில் கிடைத்த இராஜராஜனின் கி.பி. 991 ஆண்டு கன்னட கல்வெட்டு முதல் H.D.கோட்டே அன்னூரிலுள்ள முதலாம் குலோத்துங்க சோழனின் 46 வது ஆட்சியாண்டு கி.பி1116 தமிழ் கன்னட கல்வெட்டு வரை(120 ஆண்டுகள் மேலாக) சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் இங்கே (மைசூர்,மண்டியா,C.H.நகர்)தொடர்ச்சியாக கிடைக்கின்றன.( 1117 ஆம் ஆண்டு தலக்காடு போரில் விஷ்ணு வர்த்தன் இங்கு சோழர்கள் ஆட்சிக்கு முடிவு கட்டுகிறான்).

கஜஆரண்யஸ்தல( வேழ காடுகள்) என கங்கர்களின் செப்பேடுகளில் குறிக்கபெறும் இக் கங்கபாடியை சோழர்கள் கைப்பற்றி தலைக்காட்டை இராஜராஜபுரம் என்று பெயர்மாற்றம் செய்து சோழ நிர்வாக முறையை புகுத்தி ஆட்சி செய்யத் தொடங்கினர் அதுகாறும் கங்கர்களின் அரசு மதமான சமணம் செழித்திருந்த நிலையில் இங்கு சைவ நெறிமுறை கமழதொடங்கின.. சோழ அரசர்கள் தங்களது விருது பெயர்களாலே பிரம்மதேயங்களை உருவாக்கினர்.கற்றளிகளை கட்டினர் அதற்கு நிவந்தங்கள் வழங்கவும் வழி செய்தனர் முன்பு (கதம்பர், கங்கர் ஆட்சியில்) இல்லாத வகையில் ஆகமத்திலும் அர்ச்சனா விதியிலும் தேர்ச்சி பெற்ற சிவப்பிராமணர்களை தமிழகத்திலிருந்து இங்கு குடிபெயர செய்து அக்கோயில்களில் தமிழ் ஆகம முறைப்படி பூசனை வழிபாடு நடைபெறலாயிற்று. இவை வெறும் சமய வழிபாட்டு தளங்களாக மட்டும் திகழாமல் பல தரபட்ட மக்களை ஒன்றிணைக்கும் சமுதாய கூடங்களாகவும் செயலாற்றின.. கல்வி போதித்தல், ஊர்கூடி விவாதித்தல்அறப்பணி,திருவிழா போன்ற முக்கிய முடிவுகளை எடுத்தல் நில விற்பனை தொடர்பான ஆணைகளை நிறைவேற்றுதல் போன்ற செயல்பாடுகளும் இங்கு நடந்தேறின.

தமிழகத்தில் நாம் காணும் சோழக் கோயில்கள் போலல்லாமல் இவை அளவில் சிறியவை. கருவறையும் அர்தமண்டமும் மட்டுமே கொண்டவைசோழர்களின் ஆட்சிக்கு பின்னர் வந்த ஹொய்சாளர் விஜய நகர பேரரசினர்,

மைசூர் உடையார் வம்சத்தவரால் பெரும்பாலான கோயில்கள் ( கோலாரம்மன் கோயில், அப்ரமேயன் விண்ணகரம் தவிர) புனரமைப்பு மற்றும் விரிவாக்கம் செய்யப்படாமல் தற்சமயம் வழிபாடின்றி ஏறக்குறைய அழிவின் விளிம்பில் சிக்கி கிடைக்கின்றன ஆவணங்கள் குறிப்பிடும் சில கோயில்களின் தடயங்களை கூட தற்சமயம் காண இயலவில்லை.. இதற்கான காரணம் என்னவென ஆராந்தோமெனில் எந்தவொரு நாடு அல்லது மாநிலமாகட்டும் தம் மண் சார்ந்த மன்னர்களையும் மரபு சார்ந்த கலைச்சின்னங்களையுமே அறிந்து கொள்ளவும் அவற்றை பேணுவதில் காட்டும் ஆர்வத்தை அந்நிய ஆட்சியாளரையும் அவர்கள் விட்டு சென்ற வரலாற்று சின்னங்களை அறிந்து கொள்ள முற்படுவதிலும் அவற்றை பாதுகாக்க ஏற்படும் சுணக்கமும் இயல்பே!

அவ்வகையில் கர்நாடக சோழர் ஆட்சி கட்டிய கோயில்கள் பற்றிய ஆய்வு என எடுத்து கொண்டால் 1986ல் வெளிவந்த "தி இம்பீரியல் சோழா இன் கர்நாடகா என்ற முனைவர் ஆய்வேடும் "தி சோழா ஆர்ட் இன் கர்நாடகா என்ற சிறு கட்டுரை தொகுதி தவிர்த்து முழுமையான ஆய்வு நூல்கள் வெளிவரவில்லை ! நூற்றாண்டு முன்னர் B.l.ரைஸ், நரசிம்மாச்சாரியர் ஆவணங்களில் பதிப்பித்த கல்வெட்டுகள், கோயில்களின் தற்போதைய நிலை என்ன? என யோசித்தோமானால் வெறுமையே மிஞ்சுகிறது. இறையினருளால் நண்பர்களின் உதவியுடன் சில கோயில்களுக்கு சென்று ( தடிமாலிங்கி,கலியூர், சிதி பெட்டா,அவணி கெலசூர்,பன்னூர்,மாறள்ளி, மத்தூர் கே பெலத்தூர்) அக்கோயில்களை பற்றி எழுதும் பேறு வாய்க்க பெற்றேன்! அவ் வகையில் இம்முறை சிந்துவல்லி என்ற ஊரை தேர்ந்தெடுத்து அங்கு செல்ல ஆயத்தமானேன்!

சிந்துவல்லி மைசூரலிருந்து 25 கி.மீ தொலைவில் நஞ்சன்கூடு செல்லும் சாலையின் மத்தியில் அமைந்துள்ள கிராமம் அழகான இந்த சிந்துவல்லி என்ற பெயரின்பால் கொண்ட விருப்பம் யாதெனின் சோழ மாதேவியர் ஏழிசைவல்லபி,அமரவல்லி, மற்றும் தஞ்சை பெருவுடையார் கோயில் கல் வெட்டுகள் குறிப்பிடும் தளிச்சேரி பெண்டுகளான  யனவல்லி,சித்திரவல்லி, மதனவல்லி என்ற பெயர்களோடு கூடி ஒத்து வருவதால் ஏற்பட்ட ஈர்ப்பாகயிருக்கலாம்

( பெங்களூரில் ஆலூர்கருகே ஒரு சிந்துவல்லி என்ற ஊரும் அங்கு சோழ கல்வெட்டுகள் கிடைப்பதும் நோக்கற்பாலது) மைசூரிலிருந்து எனது இரு சக்கர மோட்டார் வண்டியில் கிளம்பி 15 கி்மீ. தொலைவில் கடக்கோலா என்னும் ஊரை வந்தடைந்தேன் அங்கிருந்து வலப்புறமாக பிரிந்து சென்ற பாதையில் சில மைல்கல் தூரம் பயணித்தவுடன் டி.வி.எஸ் நிறுவனத்தினரின் மோட்டார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பிரமாண்டமான தொழிற்சாலையைக் கண்டேன்! அது மாலை நேரமாதலால் முதல் பகுதி வேலையை முடித்து தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கில் நிறுவனத்தின் பேருந்துகளிலும் தத்தம் வாகனங்களிலும் புறப்பட்டு சென்று கொண்டிருந்தர் மாதக்கணக்காக கொரன்டைன் சிறை வாசத்தால் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்ததால் அத்தனை ஜனத்திரளை ஒருங்கே கண்டதில் வியப்பு மேலிட்டது உண்மையே!

பின்னர் அங்கிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள சிந்துவல்லியை நோக்கி புறப்பட்டேன். ஊரை நெருங்கும்போது மனம் சிறிது படபடத்தது புதிய இடம் முன்பின் அறிமுகமில்லாத நபர் அங்கு வந்து பழைய கோயிலை விசாரித்தால் அவ்வூர் மக்களின் மனவோட்டம் என்னவாயிருக்கும்? என்று மனதிற்குள் யோசித்தபடியே சிந்துவல்லியை வந்தடைந்தேன். ஊரின்நுழைவாயிலிலே தென்பட்ட கோபுரங்களைக் கண்டு அங்கு சென்று பார்த்த போது அவை பசவண்ணா தேவஸ்தானம் மற்றும் கனகதாசர்,கேளம்மா குடிகள் என்ற பெயரில் வணங்கப்படும் சமீப காலத்தில் கட்டப்பட்ட கோயில்களாகும். எனவே அங்கு நின்றிருந்த ஊர்காரர்களிடம் ஹள்ளி பாஷையில் (கிராமத்துகன்னடம்) மாத்தாட தொடங்கினேன் " இவரே இல்லி தும்ப ஹிந்தின கால ஷிவனது தேவஸ்தான எல்லிதே? என்று வினவியுடன் அருகிலிருந்தவர் "கோட்டே தேவஸ்தானதகேளுதாரப்பா" என அவருக்கு பதிலுரைத்து எனக்குகோயிலுக்கு செல்லும் வழியை கூற ஆரம்பித்தார்...

அவ்வழியே கிராமத்தின் குறுகலான வீதியினுள் செல்ல தொடங்கினேன் அது சிறிய கிராமம் எண்ணூறுக்கும் குறைவான வீடுகள் தமிழகத்தின் கிராமங்களை போல நகர நவீன கூறுகளை அதிகம் உள்வாங்காமல் கிராமிய மணத்தையும் அடையாளத்தையும் தம்முள் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்றே கூறலாம். மச்சு வீடுகள் அவற்றில் அடர்சிவப்பு, பச்சை வண்ணம் தீட்டி மரத்தூண்கள் தாங்கிய இரு புறத்திலும் திண்ணைகள் வெளிப்புற முற்றத்தில் பசுக்கள் எருதுகள் கட்டப்பட்டிருக்க கோழிகள் அங்கு குவியலாய் கொட்டியிருக்கும் "கொப்பர"( மாட்டுசாணம் சாம்பல், வைக்கோல் கலந்து மக்கி உருவாகும் இயற்கை எரு) யை கால்களால் கிளறி குஷியாய் இரையை உண்டு கொண்டிருந்தது இவற்றையெல்லாம் கவனித்தபடி ஊருக்கு வெளியே ஒற்றையடி பாதையில் செல்லும் போதே சட்டென்று சூழ்நிலை மாறியது இருமருங்கும் பச்சை பசலென்று புல்வெளிகள் நாற்று நெல்லின் நறுமணம் நாசிக்கு கம்மென்று வந்தது..

நூற்றாண்டு கால ஆலமரங்களின் விழுதுகள் மாலைக்காற்றில் அசைந்தாடின. பெரிய வாய்காலிலிருந்து நீர் வழிந்தோடி செம்மண் பாதையை நனைத்தது அங்கே நாம் தேடி வந்த சோழர் கால கோயில் சற்று மேட்டுபகுதியில் வீற்றிருந்தது முற்றிலும் புனரமைக்கப்பட் டு பல்வேறு வண்ணங்கள் பூசப்பட்டு காட்சியளித்தது தூண்கள் தாங்கிய வெளிமண்டபம் மற்றும் அர்தமண்டபம் விமானத்துடன் கூடிய சிறியகருவறை உள்ளே சிறிய வடிவிலான லிங்கமும் எதிரே அதே சிறு அளவில் நந்தியும் வீற்றிருந்தனர் இவை மாத்திரமே அக்காலத்தை சேரந்த்து.

மூலவரின் திருநாமம் கல்வெட்டில் மூலஸ்தானமுடையார் எனவும் நூறாண்டுக்கு முன்னர் ஆவணப்படுத்தும் போது சங்கமேஸ்வரர் என குறிக்கப்பட்டுள்ளார். தற்போது சோமேஸ்வரர் என்று ஊர் மக்களால் வணங்கப்படுகிறார். முற்றிலுமாக பாழ்பட்டு கிடந்த இக்கோயிலை ஊர் மக்கள் டி.வி.எஸ் நிறுவனத்தார் அளித்த நன்கொடையால் மீண்டும் புனரமைத்து கட்டி வழிபாடு நடத்தபடுவதாக அறிந்து மகிழ்வு கொண்டேன்! ஆவணத்தில் காணப்பெறும் அந்த முதலாம் குலோத்துங்க சோழனின் தமிழ் கல்வெட்டை அக்கோயில் சுற்றுபுறத்தில் தேடினேன் கிடைக்க வில்லை! 17 ம்நூ. சேர்ந்த கன்னட கல்வெட்டு மாத்திரம் கீழே படியருகே பதிக்கபட்டிருந்தது.

கோயிலின் புனரமைப்பு பணியின் போது அங்குள்ள பலகை கற்கள் உடைந்த நிலையிலுள்ள தூண்களையும் முன்பு அங்கிருந்த பெரிய கிணற்றில் தள்ளி மூடி விட்டனர் என்று ஊரார் மூலம் அறிந்தேன் ஒருவேளை அந்த கல்வெட்டும் அவற்றினூடே மூடப்பட்டதோ என்னவோ?
கல்வெட்டு-; (எபி.கர்நா.மடலம் 3. எண்.348)

1.ஸ்வஸ்திஸ்ரீ சகரையாண்டு ஆயிர
2.த்து முப்பது பெற்ற வியாசம்(வ)
3.த்சரத்து ஸ்ரீ குலோத்துங்க சோ
4.ழதேவர் ப்ரிதிராஜ்யத்து யாண்
5.டு முப்பத்தெழாவது முடிகொ
6.ஆண்ட சோழ- மண்டலத்துக் கெங்
7.கைகொண்டசோழ-வளநாட்டுக்
8.காரை நாட்டு அனிரலவ..........
9.யிநரய..........
10.டண்மகன் மாச்ச-க........
11.கன் முத்த- காமுண்டா -ஆன சத்ய
12.வாக்ய- காமுண்டனேன்எடுப்பி
13த்த மூலஸ்தானம்- உடையார் கோ
14.யிலும் கட்டின ஏரியும் இட்ட
15.தூம்பும்.......

கல்வெட்டு செய்தி-;
சற்று சிதைந்த நிலையிலுள்ள தமிழ் கல்வெட்டு முதலாம் குலோத்துங்க சோழனின் முப்பத்தேழாவது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டது. சக ஆண்டு 1030 என தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. முப்பத்தேழாவது ஆட்சியாண்டு என்றால் 1028 சரியானதாகும் அவ்வாறெனில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்ட ஆண்டு பொ.யு 1106-07 ஆகும். கல்வெட்டில் ஊர் பெயர் சிதைந்துள்ள நிலையில் முடி கொண்ட சோழ மண்டலத்து கங்கை கொண்ட சோழ வளநாட்டு காரை நாட்டை சேர்ந்த மச்ச காமுண்ட மகனாகிய முத்த காமுண்டா என்கிற சத்யவாக்ய காமுண்டா மூலஸ்தானமுடையார் என்ற இக்கோயிலை எடுப்பித்து, ஏரியையும் வெட்டி, தூம்பும் இட்டுவித்தான் என்று கூறுகிறது இன்றும் இவ்வூருக்கு வெளிப்புறத்தில் " எண்ணெய் ஒலெ கேரே(ஏரி) என்ற பெயரில் ஒரு ஏரி உள்ளது இது இக்கல்வெட்டு கூறும் ஏரியாக இருக்கலாம் !…








 
( மீண்டும் பிறிதொரு கர்நாடக சோழர் கால கோயிலில் சந்திப்போம்..)
 

4 October 2020

கோம்மடீஸ்வரர், கோமட்டகிரி, கர்நாடகாவின் சமண தடயங்கள்..

கட்டுரை: ஜான்பீட்டர்
முன்னால் தொல்லியல் துறை.
தாளவாடி

மௌரிய மன்னன் சந்திரகுப்தன் (322B.C- 298B.C) அரசு முடியை துறந்து தனது குருவான பத்ரபாகுடன் பாடலிபுத்ரத்திலிருந்து வந்து சரவணபெலகுலாவில் சில காலமிருந்து பின்னர் சல்லேகன முறையில் உயிர்நீத்தார். அக்காலந் தொட்டு சமணம் தென்கர்நாடகத்தில் வேரூன்றியது எனலாம். பின்னர் கங்கர்கள் காலத்தில் பெரும் செல்வாக்கு பெற்றது அவருக்கு பின்னர் ஹொய்சாளர் காலத்தில் அரசர்கள், அரசியர் அமைச்சர்கள், தண்டநாயக்கரகள் என அனைவரும் சமணத்தை போற்றி வளர்த்தனர்

நாடெங்கும் சமண ஆலயங்கள் எழுப்பினர் பத்திற்க்கும் மேற்பட்ட பாகுபலியின் ஒற்றை கல்லிலான பிரமாண்ட சிலைகளை(monolithic statue) தென் கர்நாடகத்தில் நிறுவினர் மைசூர் மற்றும் அதனருகேயுள்ள பகுதிகளை கருத்திற் கொள்வோமானால், சரவணபெலகுலாவில் உள்ள உலகபிரசத்தி பெற்ற பாகுபலியின் 57 அடி உயர சிலையை சொல்லலாம் இதனை கங்க தேசத்தின் அமைச்சர் மற்றும் படைதலைவராக பணியாற்றிய சாமுண்டராயன் 981A.D. அமைத்தார் மற்றொரு பிரமாண்ட சிலை மண்டியா மாவட்டத்தில் அரத்திபுராவில் இரு மலைகளின் மத்தியில் குன்றின் மேல் அமைந்துள்ள பாகுபலி சிலை இது

முற்கால கங்கர் பாணியில் 10 அடி உயரமும் மூன்றரை அடி அகலமுடையது இச்சிலை சரவணபெலகுலா பாகுபலி சிலைக்கும் காலத்திற்கு முற்பட்டது எனவும் கி.பி.8ம் நூற்றாண்டு காலகட்டத்தில் அமைக்கப்பட்ட தாயிருக்கலாம் என கர்நாடக வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். மேலும் மைசூரிலிருந்து 22கி.மீ தொலைவில் பெடத்தூர் என்ற பசுமை சூழ்ந்த கிராமத்தில் பெலிகெரே என்ற ஏரியின் அருகே கோமட்டகிரி என்ற குன்றின் மேல் அமைந்துள்ள 17 அடி உயர பாகுபலிசிலையை காணலாம்.
 
பக்தர்கள் இவரை தரிசிக்க ஏதுவாக படிகட்டுகள் போடப்பட்டுள்ளன. எழிலார்ந்த சூழலில் ஏகாந்தமாய் நின்றிருக்கும் இவர் எண்ணூறு ஆண்டுகள் பழமையானவர் என்கின்றனர்.
 
பாகுபலி:- இப்பெயருக்கு வலிமயான கரங்களை உடையவர் எனப் பொருள். 24 சமணதீர்த்தங்கரரில் முதல் தீர்த்தங்கரர் ரிஷபநாதரின் இளைய புதல்வர். பனிரெண்டு காலம் நின்றநிலையில் கடுந்தவம் புரிந்து ஞானத்தையடைந்தார் ( கேவலக்யான )  இவர் கோம்மடீஸ்வரர் என்ற நாமத்திலும் வணங்கப்படுகிறார்.

சிலையமைப்பு-: நீண்ட காலமாய் அசைவற்று மோன நிலையில் நின்றிருக்கும் தவக்கோலம் கயோத்சர்க நிலை!, சுருள் சுருளான தலை கேசம் காதணியில்லா வெறுமையான நீண்ட செவி கருணை பொங்க இவ்வையகத்தை காணும் வகையில் திறந்த விழிகள் ஜீவகலை ததும்ப சாந்தமான முகவசீகரிப்பு அதில் மெல்லிய புன்னகை இழையோட, அகன்ற தோள்கள் வழியாக நீண்டு முழங்கால்கள் வரை செல்லும் கரங்கள் தொடை பகுதியை தொடாதவாறும் நெடுங்காலமாக புரிந்த கடுந்தவத்தினால் கொடிகள் காலிலிருந்து படர்ந்து சென்று தோள் வரை சுற்றிக் கொண்டிருக்கும் வண்ணம் பாங்குற வடிக்கப்பட்டிருக்கும் சிறப்பு என அத்தனையும் சரவணபெலகுலாவிலுள்ள பாகுபலியின் பிரமாண்ட சிலையை பிரதிபலிப்பதாக வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுங்கின்றனர் ஆனால் சிலையின் பக்கவாட்டில் இருபுறமும் யக்‌ஷன் யக்‌ஷி காட்டப்படருக்கிறது மாறாக இங்கு புற்றிலிருந்து நாகங்கள் படமெடுத்த நிலையில் காட்டப்பட்டிருப்பது மட்டும் வித்தியாசம் அவ்வளவே!

மாஸ்தாபிஷேகம்-; சரவணபெலகுலாவில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்நிகழ்வு பக்தர்கள் பொது ஜனங்களை கவரும் வண்ணமாக இங்கு ஆண்டு தோறும் கடந்த 70 ஆண்டுகளாக தொடர்ந்து நடை பெற்று வருகிறது இதனை ஷிமோகா மாவட்டம் ஸ்ரீஷேத்ர ஹம்புஜ ஜைன மடத்தை சேர்ந்தவர்கள் சிறப்பாக நடத்தி வருகின்றனர். நண்பகல் 12 மணிக்கு துவங்கும் இந்த அபிஷேக ஆராதனை மதியம் 2 மணிவரை நடைபெறுகிறது. குங்குமம், மஞ்சள், வாசனை திரவியங்கள் கலந்த வண்ணகலவை புனிதநீர் சந்தனம் அஷ்டகாந்தம் பால் இளநீர் கரும்புசாறு என அபிஷேகம் செய்யும் போது பக்தர்கள் " பாகுபலி மஹாராஜரிகெ ஜெயவாகலி!" அஹிம்ச பரம தரமனிகே ஜெயவாகலி என உற்சாக கோஷமிடுகின்றனர்... பின்னர் மங்களாராதனையுடன் மஸ்தாபிஷேக நிகழ்வு நிறைவுகிறது.. கோமட்டகிரியருகே ஒரு பாறையின் மேல் பாகுபலியின் பாதசுவடுகள் வடிக்கப்பட்டுள்ளது பக்தர்கள் தரிசிக்க ஏதுவாக படிகட்டுகளுடன் தளம் போன்று அமைத்துள்ளனர்  மேலும் அருகே 24 தீர்த்தங்கரர்களின் பாத சுவடுகளுக்கும் சிறு மாடங்கள் கட்டி அதனையும் வழிபடுகின்றனர்..














18 August 2020

லஷ்மிநாராயணர் திருக்கோயில், ஹொசஹாலலு, மண்டியா மாவட்டம், கர்நாடகா.

இடைக்கால கர்நாடகத்தில் விஷ்ணுவர்த்தனன் தலமையின் கீழ் வலு பெற்ற ஹொய்சாள வம்சம் சேவுனர்களிடமிருந்து வட கர்நாடகத்தையும் சோழர்களிடமிருந்து தென் கர்நாடகப்பகுதிகளையும் மீட்டெடுத்து கர்நாடகம் முழுமையும் கைக்கொண்டு பேரரசாக உருவெடுத்தது.. கலை, இலக்கியம் சமுதாய வாழ்வியல் முறைகளில் மேம்பாட்டு நிலையைடைந்து ஹொய்சாளர் காலம் கர்நாடக வரலாற்றில் பொற்காலமாக விளங்கியது. அதுகாறும் சமண மதத்தை அரச மதமாக பின்பற்றிய ஹொய்சாள குலம் இராமானுஜர் தத்துவார்த்த கோட்பாட்டின்பால் கவரப்பட்டு பிட்டிதேவன் என்ற விஷ்ணுவர்த்தன் வைணவ மதத்தை தழுவியப்பின்னர் நாடெங்கிலும் நூற்றுக்கணக்கான சைவ,வைணவ, சமணக்கோயில்கள் எழுப்பப்பட்டன..

சற்றொப்ப முந்தைய ஹொய்சாள மன்னன் கார்மஹொய்சாளன் ( 1022 A.D) காலந்தொட்டு மாலிக்காபூர் படையெடுப்பால்(1310A.D) அல்லலுற்ற மூன்றாம் வல்லாளன் காலம் வரை ஹொய்சாள பேரரசின் முழுமையும் சுமார் 648 கோயில்கள் கட்டப்பட்டன என வரலாற்றாய்வாளர்கள் கணிக்கின்றனர்.
கங்கபாடி என்றழைக்கப்பட்ட மைசூர், மண்டியா, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான ஆலயங்களை எழுப்பினர். ஹொய்சாள கட்டிடக்கலை வல்லுனர்கள் மேலை சாளுக்கியரின் கூட்டல் வடிவ(cruciform)
அமைப்பினின்றும், சோழர்களின் நீள்சதுரங்க(rectangle) கோயில் கட்டிட அமைப்பினின்றும் முற்றிலும் மாறுபட்ட நட்சத்திர (stellar) வடிவ அமைப்புடைய கோயில்களை அறிமுகப்படுத்தினர்

தென் கர்நாடகப்பகுதிகளில் பெருமளவு கிடைக்கும் மாக்கல்லினை (chlorit schist soap stone ) கொண்டு கோயில்களை அமைத்தனர் இக்கல்லின் சிறப்பம்சம் யாதெனில் பாறையினின்று வெட்டியெடுத்து சிற்பங்களாக செதுக்கும் வரை இலகும் தன்மையுடையனவாகவும் (malleable and ductile) சூரிய ஒளி பட்டவுடன் இறுகி கடினமாகிவிடும் இந்த கருமை மற்றும் இளம்பச்சை நிறம் கொண்ட மாக்கல்லினால் மிக நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்களையும் கடைந்தெடுத்த வழுவழுப்பான தூண்களையும் அமைத்து கண்கவர் கோயில்களை கட்டினர் சிற்பிகள் தத்தம் பெயர்களை தங்களது படைப்புகளில் பொறித்து வைத்தனர் இதன் மூலமாகவும் கல்வெட்டுகளினின்றும் அக்காலத்திய புகழ் பெற்ற சிற்பிகளையும் அவர்தம் பங்களிப்பினையும் அறிகிறோம் மல்லேஜா, மானியோஜா, மல்லிதம்மா, விபனா, மதுவண்ணா, கும்மபைரணா, தொண்டசாரி போன்றோர் பிரசித்தமானஹொய்சாள சிற்பிகள் என்பதையறிகிறோம் இத்தகு ஹொய்சாள கோயிலைப் பற்றி இங்கு காண்போம்

ஹொசஹாலலு -; மைசூருக்கருகே மண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜ பேட்டையில் மேற்காக 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இவ்வூர்.
ஹொய்சாளர் காலத்தில் புகழ்பெற்ற சதுர்வேதி மங்கலமாக சமண, சைவ வைணவ கோட்பாடுகளை போதிக்கும் மடங்கள் கொண்டு திகழ்ந்துள்ளது அக்காலத்தில் ராயசமுத்திரம் மற்றும் ஹொசஹொலவு என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது. தற்போது சைவ வைணவ கோயில்கள் அழியும் தருவாயில் இருந்தபோதும் வைணவ கோயிலான லக்ஷ்மி நாராயணர் திருக்கோயில் நல்ல நிலையில் சிறப்பாக அமைந்து பக்தர்களையும் கலையார்வளர்களை கவரும் வண்ணம் உள்ளது.

லஷ்மி நாராயணர் திருக்கோயில்

இக்கோயிலானது ஹொய்சாள கோயில் கட்டிட மரபின்படி திரிகூடசால அமைப்பில் கட்டப்பட்டது ஜகதியானது ஒரு மீட்டர் உயரத்துடன் மேடை போன்று எழுப்பப்பட்டு அர்த மண்டபத்தை மையப்படுத்தி மூன்று கருவறைகள் கொண்ட கோயிலாகும் ஒன்றில்மட்டுமே கருவறையின் மீது சுகநாசியுடன்கூடிய விமானம் கட்டப்பட்டுள்ளதுமற்றவை வெறும் தளங்களாக விடப்பட்டுள்ளன கருவறைகள் மூன்றும் இடைநாழியுடன் நவரங்கம் எனப்படும் அர்தமண்டபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது

முதன்மை கருவறையில் நாராயணர் லலாதாம்பிகா கோலத்தில் சம்பங்கமாக நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். மேலிரு கரங்களில் சங்கு. சக்கரத்துடனும் கீழிரு கரங்கள் முறையே கதை மற்றும் பத்மத்தை பற்றியிருக்க நுண்ணிய வேலைப்பாடுகளமைந்த அணிகலன் மற்றும் நேரத்தியான ஆடையணிந்த நிலையில் நாகவடிவ தோரணத்தின் மேற்புறம் கீர்த்திமுகம் காட்டப்பட்டிருக்கிறது. தெற்குகருவறையிலுள்ள வேணுகோபாலசாமி சிலை தற்காலத்தில் அமைக்கப்பட்டதெனவும் பழைய சிற்பம் மைசூருக்கருகேயுள்ள கண்ணம்பாடி கிருஷ்ணர் கோயிலுக்கு எடுத்து சென்று அங்கு வழிபடுகின்றனர் என்பது இங்கு நிலவும் செவிவழி செய்தியாகும். தென்புறத்திலுள்ள கருவறையின் வாயிற்புற காவலர்கள் இரு புறமும் நின்றிருக்க மத்தியில் லஷமிநரசிம்மர் தமது மடியில் பூதேவி சகிதமாக அமர்ந்த நிலையில் அருள் பாலிக்கிறார். கீழ்புறம் பிரகலாதன் பெருமாளை சேவிக்கும் காட்சி வடிக்கப்பட்டுள்ளது. அர்த மண்டபத்தை நான்கு தூண்கள் தாங்கி நிற்கின்றன அவை நன்கு கடையப்பட்டு வழுவழுப்பான நிலையில் நுண்ணிய வேலைப்பாடுகளை கொண்டு வடிக்கப்பட்டுள்ளன. மேலும் இத்தூண்கள் ஒன்பது பகுதிகளாக பிரிக்கப்பட்டு அவற்றில் வெவ்வேறு கோணங்களில் நடன மாந்தர்கள் பாங்குற காட்டப்பட்டுள்ளனர். அர்த்த மண்டபத்தின் விதானத்தில் வித விதமான அழகு புடைப்புச் சிற்பங்கள் சிற்பியின் கற்பனைக்கும் கலைத்திறனையும் நமக்கு சான்றாய் உணர்த்துகிறது. இம்மண்டபத்தில் மஹிஷாசுர மர்த்தினி மஹிஷனை வதம் செய்யும் கோலத்துடன்  காட்சி தருகிறார்

அதிட்டானம் எனப்படும் மேடை ஆறு பட்டிகைகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வவொரு பட்டிகைகளிலும் அன்னப்பறவைகள், யானைகள்,குதிரைகள் கொடிகள், இலைச்சுருள்கள் ஆடவர் பெண்டிர், பெண்கடவுளர்கள் மற்றும் இராமாயண மஹாபாரத கிருஷ்ணலீலா காட்சிகள் பாங்குற படைக்கப் பட்டுள்ளன. நடுப்பகுதியான கருவறையின் சுவர்களில் நூற்றிருபது சிற்பங்கள் எடுப்பான தோற்றமும் நுட்ப வேலைபாடுகளுடன் இசைக்கருவிகள் வடிக்கப்பட்டுள்ளன இச்சிற்பங்களில் சிவனின் திருக்கோலங்கள் முன்னிலைப்படுத்தி அமைத்திருப்பது சிறப்பு. நடனமாடும் சரஸ்வதி பார்வதி, பிரம்மா, வாசுதேவன் யோகமாதவா, காலிங்கநர்தனன் ஆடல்மகளிர் இசைக்கருவிகள் என பல்வேறு சிற்பங்கள் ஹொய்சாளர் காலத்திய கலை பண்பாட்டு சிறப்பினை நமக்கு காட்டுவனவாய் அமைந்துள்ளது.

இக்கோயிலில் கல்வெட்டுகள் காணப்படாமையால் இவற்றின் காலம் குறித்து அறுதியிட்டு கூறுதல் கடினம் ஆயினும் கோயில் கட்டுமானம், சிற்பங்களின் வடிவமைப்பைக் கண்ணுறுங்கால் நக்கேஹள்ளியிலுள்ள லஷ்மி நரசிம்மர் கோயில் சோமநாதபுரத்திலுள்ள கேசவர் கோயிலினையும் ஒத்துவருவதால் இக்கோயில் மல்லிதம்மா என்ற சிற்பியால் 1240 A.D ஆண்டு கட்டப்பட்டிருக்கலாம் என கன்னட வரலாற்றாய்வாளர்கள் ஒருவாறு கணிக்கின்றனர்..

கட்டுரை : ஜான் பீட்டர்
வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்